முருக சிவகுமார் (murugasivakumar)
பணத்தை கொட்டி கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்!

வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது! என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல.

அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிருவாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார்.

அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தை போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார்.

அடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளை தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையை காரணமாக காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதை கூட வாங்கி தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..!
முருக சிவகுமார் (murugasivakumar)
உலக அரங்கில் பல்வேறு பெருமைகளை நம் நாடு பெற்றிருப்பதாக மார்தட்டிகொள்கிறோம். அதையெல்லாம் தூர தள்ளுகிற ஒரு செயல் புரையோடிக் கிடப்பதை கண்டு நாம் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டியிருக்கிறது. அத்தகைய நிலைக்கு நமது ஆட்சியாளர்களும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களுமே காரணம் என்பதுதான் வருந்தத்தக்கது. அந்த பெரும் கொடுஞ்செயல் ஊழலை தவிர வேறில்லை!

தனிமனிதர் ஒழுக்கமும் மக்களின் பண்பும்’ என்ற தலைப்பில் நடந்த கருதரங்கில் பேசிய நமது துணை குடியரசு தலைவர் தமீம் அன்சாரி, பொதுமக்களின் சேவையில், குடிமைச் சேவைகள், சட்டம் மற்றும் நீதி ஆகிய மூன்று துறைகளில் ஒழுக்கப் பண்பாடு என்பது இன்று மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பொது வாழ்வில் ஊழல் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார். அதோடு நில்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஊழல் அதிகரித்ததன் விளைவாக கருப்புப் பண உற்பத்தி, கவலை தரும் பொருளாதார குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஊழல்கள், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்ற வடிவங்களில் சாதாரண பொதுமக்கள் அனுபவிப்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கவலை குடியரசு துணைத் தலைவருக்கு மட்டும் இருப்பதாக யாரும் கருதிவிட வேண்டாம். நம் நாட்டில் வாழ்கிற கடைக்கோடி குப்பன், சுப்பன் வரை அத்தனை பேருக்குமே அந்தக் கவலை இருந்து வருகிறது. காரணம், நம் நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை பணம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் கையூட்டுப் பணம் கொடுப்பவரின் எண்ணிக்கையும், அதை வாங்கும் அதிகார மட்டத்தினர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

பணம் பாதாளம் வரை பாயும் என்று யாரோ சொல்லிய பழமொழி இன்று நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையாகவே இருந்து வருகிறது. அலுவலகத்தில் ஒரு வேலை ஆகவேண்டி சென்றால், கடை நிலை ஊழியரில் தொடங்கி அத்துறை தலைமை வரை அளந்து கொடுத்தாக வேண்டும். பணம் கொடுக்காவிட்டால், அது இல்லை; இது இல்லை என்று சொல்லி பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு, ஆண்டுகள் உருண்டோடினாலும் அது நம் கைக்கு வந்து சேரவே சேராது. இந்த நிலையை நம் நாட்டில் உள்ள யாரும் மறுப்பதற்கில்லை.

வானம் பார்த்த பூமியே உலகமென எண்ணி வாழ்கிற ஏழை உழைப்பாளியின் மகள் திருமணத்திற்கு உதவியாக இருக்குமென மாநில அரசு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தையும், கருவுற்ற பெண்களுக்கு உதவித் தொகை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு திட்டமும் முழுமையாக சேராத நம் நாட்டில் கிராமப்புற ஏழை பெண்களுக்கான இந்த உதவித் தொகை திட்டங்களும் சேருமா என்ன? முழுமையாக கிடைப்பதில்லை. அதிகாரிகள் மத்தியில் பரவியிருக்கிற ஊழல் என்னும் விஷமே இந்த நிலைக்கு காரணம். அதிகாரிகள் கேட்கிற கையூட்டு பணத்தை கொடுக்காததால், உதவித் தொகைக்கு விண்ணப்பித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து அது நடக்கும்போது கூட திருமண உதவித் தொகை கிடைப்பதில்லை என்பது வெட்கக்கேடானது.

சாதியற்ற சமூகம் உருவாக வேண்டுமானால், அகமண முறை ஒழிந்து புறமண முறை பல்கி பெருக வேண்டும் என்று சமூகவியல் ஆய்வாளர் அம்பேத்கர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன் பேரில் சாதிகளை கடந்து வந்து சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையருக்கு உதவித் தொகையை அரசு அறிவித்திருக்கிறது. இந்த உதவித் தொகை அவர்களுக்கு கிடைக்காமல் முடக்குவதற்கு லஞ்சம் பேராயுதமாக அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வக்கிர மனம் கொண்ட சாதி இந்துக்களின் எண்ணம் ஈடேற்றம் அடைகிறது!

இப்படி அரசு துறை அலுவலகங்களில் கையூட்டு புழங்குவதை அரசு அறிந்திருக்காமல் இல்லை. ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கும் அரசின் முயற்சி அவ்வப்போது வெளியே தெரியாமலில்லை. ஊழல் ஒழிப்பு துறை அதிகாரிகளால் நாள்தோறும் பல ஊழல் பெருச்சாலிகள் - அதிகாரிகள் கைது செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது. அத்தகைய கைது நடவடிக்கையால் ஏதேனும் பயன் விளைந்ததுண்டா? இல்லைவே இல்லை.

ரூ.2500 இலஞ்சம்: கள்ளக்குறிச்சி மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது, ரூ. 2,000 இலஞ்சம்: மின் வாரிய அலுவலர்கள் இருவர் கைது, இலஞ்சம் வாங்கிய வன அதிகாரிகள் 2 பேர் கைது, ரூ. 500 இலஞ்சம் வாங்கிய விழுப்புரம் நர்ஸ் கைது, 17.45 இலட்சம் ரூபாய் கையாடல் கூட்டுறவு வங்கி செயலர் கைது, கர்ப்பிணி உதவித்தொகை வழங்க இலஞ்சம் வாங்கியதாக நர்சு மீது வழக்கு, இலஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது, ரூ.50 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கைது..... இப்படி நாள்தோறும் ஊழல் செய்த - கையூட்டு பெற்ற பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள்.

கைது... வீட்டில் சோதனை, ஆவணங்கள் கைப்பற்றல், பணியிடை நீக்கம்... மீண்டும் பணி... இதுதான் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீதான தற்போதைய நடவடிக்கைகள். இந்த நடவடிக்கைகளால் எந்தவொரு அதிகாரியும் அச்சமடைந்து கையூட்டு வாங்காமல் இருப்பதில்லை. ஊழல் அதிகாரிகளுக்கு பெரிய தண்டனை ஏதும் வழங்கப்படுவதில்லை என்பதால்தான் மற்ற அதிகாரிகள் அச்சப்படாமல் தங்களது ஊழல் பணியை தொடர்கிறார்கள். இப்படி நடப்பதால்தான் உணவில் தொடங்கி உயிரை காக்கும் மருந்துகள் வரை காலாவதிகளும் கலப்படங்களும் புகுந்திருக்கின்றன. இந்தக் கொடுஞ்செயலை செய்த கொலையாளிகள் அரசதிகாரிகளின் துணையின்றி துணிந்து செய்திருக்க முடியுமா? ஏராளமான அப்பாவி உயிர்கள் செத்து மாண்டாலும் பரவாயில்லை; பல கோடிகளை சேர்த்து வைத்து சுகமான வாழ்வை அனுபவித்து, மீதியானதை பிள்ளைகளுக்கு விட்டு செல்வது என்ற இலக்கு மட்டுமே ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட யாராலுமே முடியாதா? என்ற கேள்விக்கு ஒரே விடை ஆழ தேடி வேரறுப்பது. அதாவது ஒரு விஷச் செடியை அழிக்க வேண்டுமானால் கிளை நுனிகளை முறித்துவிட்டால் மட்டும் போதாது, அதன் வேர் பகுதியை தோண்டி முழுவதுமாக அழிக்க வேண்டும். அது போலவே நம் நாட்டிலும் சமுதாயத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் என்னும் அரக்கனை அழிக்கவும் வேண்டும். இதற்காக துணிச்சலான அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அந்த நடவடிக்கையை கண்டு ஊழல் பெருச்சாலிகள் கொந்தளிக்கக் கூடும். அவர்கள் என்ன செய்தாலும் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.

நடவடிக்கையை யார் எடுப்பது? - அரசும் ஆட்சியாளர்களும் தான்!

ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்படுகிற ஊழல் செய்யும் அதிகாரிகள், ஆட்சியாளர்களின் உதவியை நாடி மீண்டும் பணிக்கு திரும்பிவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். ஊழல் செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டால், வழக்கு விசாரணை ஏதுமின்றி அந்த இலஞ்சம் வாங்கிய அதிகாரியை மீண்டும் பணியில் எங்கும் சேராதபடி பணி நீக்கம் செய்ய வேண்டும். அதோடு நில்லாமல் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் கண்டறிந்து அரசுடைமையாக்க வேண்டும். அப்போதுதாவது அதிகாரிகள் திருந்துவார்களா? என்பதை பார்ப்போம்.

கடை நிலை பதவி - உயர் பதவி, அதிகாரிகள் - ஆட்சியாளர்கள் என வலைப்பின்னலாக இருக்கிற இந்த ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டுவருவார்கள் என்று சொன்னால் பொதுமக்கள் சிரிக்கிறார்கள். வேறென்ன சாதாரண மக்களால் செய்ய முடியும்!