undefined
undefined


பிகாரில் சபாநாயகர் மீது செருப்பு வீசியது, கருநாடகத்தில் சாப்பிட்டு தூங்கி சபையை அவமதிப்பது, காஷ்மீரில் சபாநாயகர் மீது மைக்கை எறிந்தது. இதையெல்லாம் செய்தவர்கள், மாண்புமிகு எம் எல் ஏக்கள்தான். மாண்புடன் இருக்க வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமர்களத்தில் ஈடுபடுவது மக்களின் நலனுக்காக (?!) என்று நினைத்தால் நீங்கள் உலகம் அறியாத அப்பாவிகள். சுருட்டிய பணத்தில், செய்த மோசடிகளில் யார் உச்சம் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்தி அடித்து தாக்குகிறார்கள். சட்டமன்றங்களில் எம் எல் ஏக்கள் நடந்து கொள்வதை கண்ட மக்கள் தாங்கள் அனுப்பிய பிரதிநிதிகளை எண்ணி முகம் சுளிக்கிறார்கள். வெட்கப்பட்டு தலைகுனிகிறார்கள். ஊழல் செய்வதும், அடிதடியில் இறங்கி களேபரத்தில் ஈடுபடுவதும்தான் எம்.எல்.ஏக்களுக்கான தகுதி என்ற தோற்றம் உருவாகி வருகிறது.

இரண்டாவது நாள் பேரவை தொடங்கியதும் எம்.எல்.ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் மீது செருப்பு வீசப்பட்டது. பல ஆயிரம் மக்களின் ஒற்றை பிரதிநிதியாக இருந்து செயல்பட வேண்டிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் தாக்கிக் கொள்வதை அநாகரீகமாக இருக்கிறது.


இத்தகைய கேடுகெட்ட செயல்பாடுகள் இங்கு விவாதிக்கப்பட்ட பிகார், கருநாடகம், காஷ்மீர் ஆகிய மாநில சட்டமன்றங்களில்தான் நடந்தனவா? இல்லையில்லை. இந்தியாவின் சட்டமன்றங்களில் கூட்டம் நடக்கும்போதெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பதற்றம் நிலவும். எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் ரகளையில் ஈடுபட்டு அடித்துக்கொள்வார்கள். இதுதான் சட்டமன்றங்களின் நடவடிக்கைகள். இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மாநில சட்டமன்றங்கள் அனைத்துமே அதிகார துஷ்பிரயோகத்தோடு, பணம் சம்பாதிக்கும் தொழில் கூடங்களாகவும், கொள்ளை கும்பல்கள் அதிகார போட்டியில் மோதிக்கொள்ளும் மல்யுத்த கூடங்களாகவும் மாறியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அதிகார சாதிகளோடு கைகோர்த்து கொண்டு அடித்தள மக்களுக்கு சேரவேண்டிய அவர்களின் உரிமைகள் கூட முழுமையாக சென்று சேர எம்.எல்.ஏக்கள் விடுவதில்லை.
அடித்தள மக்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் வர்க்கங்களின் காலடியில் சரணாகதி அடைந்து நாயினும் கீழாக நக்கி பிழைத்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து கேட்டால், கட்சித் தலைமையின் கட்டளைக்கு பணிவதாக ஊளையிடுகிறார்கள்.
சாதி அதிகாரங்களுக்கும், கட்சி தலைமை அதிகாரங்களுக்கும் கீழ் பணிந்து நடந்தால் அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எதுவுமே கிடைக்காது என்பதை நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே நாட்டின் தந்தையாக போற்றும் தகுதி படைத்த தீக்கதரிசி டாக்டர் அம்பத்கர் சுட்டிக்காட்டினார். அதோடு நில்லாமல், சாதி - கட்சி அதிகாரங்களை கடந்து தலித் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட வேண்டுமானால் இரட்டை வாக்குரிமை முறையை தேர்தலில் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுமேதை அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், காந்தி உள்ளிட்ட மதவாதிகளும் சாதிவாதிகளும் இரட்டை வாக்குரிமை முறையை கொண்டுவரவிடாமல் தடுத்து நிறுத்தினர். கபட நாடகங்களை நடத்தி தனி தொகுதி முறையை கொண்டுவர அம்பேத்கரை சம்மதிக்க வைத்தார்கள். இதன் விளைவை தலித் பிரதிநிதிகளாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்களின் செயல்பாடுகள் மூலமாக தலித் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில், எந்த ஏற்பாட்டையும் செய்யாதிருப்பது வருந்தத்தக்கது. இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மையை விளைவிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றத்திலேயே அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், ஜனநாயகம் பற்றி வாய்க்கிழிய பேசும் எம்.எல்.ஏக்கள் அதை மதிப்பதேயில்லை. அரசியல்வாதிகளை முறைப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அரசியல்வாதிகளிடம் இருப்பதுதான் வேடிக்கையானது. நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த கேடுகெட்ட போக்கு நிலவுகிறது. ஆனாலும் உலகிலலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாம்!?
ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. சட்ட மன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளமாக பெரும் தொகை வழங்கப்படுகிறது.ஆனால் சட்டமன்றங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் பொன்னான நேரமும், பணமும் வீணாக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருக்கிறது.
ஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை விட, இந்தியாவின் பீகார், சத்திஷ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள மக்கள் மிக அதிக வறுமையில் வாடுகிறார்கள். யுஎன்டிபி(UNDP) அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றங்கள் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகின்றன.
விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் கண்ணியத்தை காக்க கட்டாயமாக மனதளவில் மாற வேண்டும். அவர்கள் நடத்தும் ஆரோக்கியமான விவாதமும் செயல்பாடுகளும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் என்பதால் அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களை மன்றங்களுக்கு அனுப்பிவைத்த மக்களின் விருப்பம்! பொதுமக்கள் விருப்பப்பட்டால் மட்டும் போதாது விழிப்போடு செயல்பட வேண்டும். இதுதான் சமூக வளர்ச்சிக்கு உதவும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணம்.