முருக சிவகுமார் (murugasivakumar)
“சட்டப் பேரவை என்பது பழைய பொருள் விற்கும் சந்தை கடை அல்ல. அது Justify Fullமக்களின் எதிர்காலத்தை ஆக்கவும் அழிக்கவும் அதிகாரமுடைய ஓர் இடம். சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான ஒரு சட்டத் தீர்மானத்தை முன்னெடுக்கவோ அல்லது மோசமாக்கும் சட்டத் தீர்மானத்தைத் தடுக்கவோ சட்டப்பேரவை உறுப்பினர்களால் முடியும்.“ - இதை சொன்னவர் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கார். இந்த நோக்கத்தை இந்திய சட்டமன்றங்கள் செய்கின்றனவா? என்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

பிகாரில் சபாநாயகர் மீது செருப்பு வீசியது, கருநாடகத்தில் சாப்பிட்டு தூங்கி சபையை அவமதிப்பது, காஷ்மீரில் சபாநாயகர் மீது மைக்கை எறிந்தது. இதையெல்லாம் செய்தவர்கள், மாண்புமிகு எம் எல் ஏக்கள்தான். மாண்புடன் இருக்க வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமர்களத்தில் ஈடுபடுவது மக்களின் நலனுக்காக (?!) என்று நினைத்தால் நீங்கள் உலகம் அறியாத அப்பாவிகள். சுருட்டிய பணத்தில், செய்த மோசடிகளில் யார் உச்சம் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்தி அடித்து தாக்குகிறார்கள். சட்டமன்றங்களில் எம் எல் ஏக்கள் நடந்து கொள்வதை கண்ட மக்கள் தாங்கள் அனுப்பிய பிரதிநிதிகளை எண்ணி முகம் சுளிக்கிறார்கள். வெட்கப்பட்டு தலைகுனிகிறார்கள். ஊழல் செய்வதும், அடிதடியில் இறங்கி களேபரத்தில் ஈடுபடுவதும்தான் எம்.எல்.ஏக்களுக்கான தகுதி என்ற தோற்றம் உருவாகி வருகிறது.

பீகாரில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களில் ரூ.11,412 கோடி ஊழல் நடந்திருப்பதாக, விசாரணை அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் தங்கள் முன் இருந்த மைக்குகளை உடைத்தார்கள். மேஜை, நாற்காலிகளை கீழே தள்ளி சாய்த்தார்கள். அவர்கள், சபாநாயகரின் இருக்கைக்கு முன் சென்று, கையில் இருந்த பேப்பர்களை கிழித்து எறிந்தார்கள். அப்போது எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சில உறுப்பினர்கள் லேசான காயம் அடைந்தனர்.

இரண்டாவது நாள் பேரவை தொடங்கியதும் எம்.எல்.ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் மீது செருப்பு வீசப்பட்டது. பல ஆயிரம் மக்களின் ஒற்றை பிரதிநிதியாக இருந்து செயல்பட வேண்டிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் தாக்கிக் கொள்வதை அநாகரீகமாக இருக்கிறது.

பிகாரில்தான் இப்படி என்றால் அதைவிட கேடுகெட்ட நிலையில் கருநாடக சட்ட மன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். என்னதான் பிரச்சனை என்றாலும் ஒரு நாகரீகத்தோடு நடந்துகொள்வதுதான் மாண்பு. இந்த மேன்மை அதிகார மனம் உள்ளவர்களுக்கு வரவே வராது. ஆனால், ஒரு இடத்திற்கு தர வேண்டிய மதிப்பை தராமல் கருநாடக சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாண்பற்ற போக்கில் நடந்துகொண்டார்கள். கருநாடகாவில் ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடத்தி செய்து வரும் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் என்ற ஏன்ற பெயரில் ரவுடித்தனம் செய்தனர். விடிய விடிய அவர்கள் சட்டசபைக்குள்ளேயே இருந்தனர். சட்டசபைக்குள் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்து தூங்கினார்கள். இந்த கேவலத்தை நாடே காட்சி ஊடகங்களில் வேடிக்கை பார்த்தது. மக்கள் முகம் சுளித்து மனநெருடல் அடைந்தார்கள். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காமிரா முன்பு வெட்கமின்றி பல் இளித்தார்கள்.

காஷ்மீர் சட்டமன்றக் கூட்டத்தில் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மெகபூபா எழுந்து, பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டார். காவலர்களை ஏவல் செய்து அரச பயங்கரவாததை முன்னெடுத்து, ஏதுமறியாத அப்பாவிகளை வஞ்சிக்கும் கொடூர மனம் கொண்ட ஆட்சியாளர்கள் அதிகார மனப்பாண்மையோடு நடந்துகொண்டார்கள். மக்கள் பிரச்சனை குறித்தும், அரச பயங்கரவாதம் குறித்தும் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்த மெகபூபா, சபாநாயகர் முகம்மது அக்பரை நோக்கி ஆவேசமாக விரைந்தார்.ஒரு கட்டத்தில் கோபமாகி சபாநாயகர் மேஜையில் இருந்த பொருட்களை கீழே வீசினார். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி வீசியபோது அவைக் காவலர்கள் தடுத்து விட்டனர். சபையே சண்டைக்களமாகியது.

இத்தகைய கேடுகெட்ட செயல்பாடுகள் இங்கு விவாதிக்கப்பட்ட பிகார், கருநாடகம், காஷ்மீர் ஆகிய மாநில சட்டமன்றங்களில்தான் நடந்தனவா? இல்லையில்லை. இந்தியாவின் சட்டமன்றங்களில் கூட்டம் நடக்கும்போதெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பதற்றம் நிலவும். எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் ரகளையில் ஈடுபட்டு அடித்துக்கொள்வார்கள். இதுதான் சட்டமன்றங்களின் நடவடிக்கைகள். இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மாநில சட்டமன்றங்கள் அனைத்துமே அதிகார துஷ்பிரயோகத்தோடு, பணம் சம்பாதிக்கும் தொழில் கூடங்களாகவும், கொள்ளை கும்பல்கள் அதிகார போட்டியில் மோதிக்கொள்ளும் மல்யுத்த கூடங்களாகவும் மாறியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அதிகார சாதிகளோடு கைகோர்த்து கொண்டு அடித்தள மக்களுக்கு சேரவேண்டிய அவர்களின் உரிமைகள் கூட முழுமையாக சென்று சேர எம்.எல்.ஏக்கள் விடுவதில்லை.

அடித்தள மக்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் வர்க்கங்களின் காலடியில் சரணாகதி அடைந்து நாயினும் கீழாக நக்கி பிழைத்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து கேட்டால், கட்சித் தலைமையின் கட்டளைக்கு பணிவதாக ஊளையிடுகிறார்கள்.

சாதி அதிகாரங்களுக்கும், கட்சி தலைமை அதிகாரங்களுக்கும் கீழ் பணிந்து நடந்தால் அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எதுவுமே கிடைக்காது என்பதை நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே நாட்டின் தந்தையாக போற்றும் தகுதி படைத்த தீக்கதரிசி டாக்டர் அம்பத்கர் சுட்டிக்காட்டினார். அதோடு நில்லாமல், சாதி - கட்சி அதிகாரங்களை கடந்து தலித் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட வேண்டுமானால் இரட்டை வாக்குரிமை முறையை தேர்தலில் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுமேதை அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், காந்தி உள்ளிட்ட மதவாதிகளும் சாதிவாதிகளும் இரட்டை வாக்குரிமை முறையை கொண்டுவரவிடாமல் தடுத்து நிறுத்தினர். கபட நாடகங்களை நடத்தி தனி தொகுதி முறையை கொண்டுவர அம்பேத்கரை சம்மதிக்க வைத்தார்கள். இதன் விளைவை தலித் பிரதிநிதிகளாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்களின் செயல்பாடுகள் மூலமாக தலித் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில், எந்த ஏற்பாட்டையும் செய்யாதிருப்பது வருந்தத்தக்கது. இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மையை விளைவிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றத்திலேயே அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், ஜனநாயகம் பற்றி வாய்க்கிழிய பேசும் எம்.எல்.ஏக்கள் அதை மதிப்பதேயில்லை. அரசியல்வாதிகளை முறைப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அரசியல்வாதிகளிடம் இருப்பதுதான் வேடிக்கையானது. நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த கேடுகெட்ட போக்கு நிலவுகிறது. ஆனாலும் உலகிலலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாம்!?

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. சட்ட மன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளமாக பெரும் தொகை வழங்கப்படுகிறது.ஆனால் சட்டமன்றங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் பொன்னான நேரமும், பணமும் வீணாக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருக்கிறது.

ஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை விட, இந்தியாவின் பீகார், சத்திஷ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள மக்கள் மிக அதிக வறுமையில் வாடுகிறார்கள். யுஎன்டிபி(UNDP) அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றங்கள் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகின்றன.

விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் கண்ணியத்தை காக்க கட்டாயமாக மனதளவில் மாற வேண்டும். அவர்கள் நடத்தும் ஆரோக்கியமான விவாதமும் செயல்பாடுகளும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் என்பதால் அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களை மன்றங்களுக்கு அனுப்பிவைத்த மக்களின் விருப்பம்! பொதுமக்கள் விருப்பப்பட்டால் மட்டும் போதாது விழிப்போடு செயல்பட வேண்டும். இதுதான் சமூக வளர்ச்சிக்கு உதவும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணம்.
முருக சிவகுமார் (murugasivakumar)
பணத்தை கொட்டி கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்!

வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது! என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல.

அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிருவாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார்.

அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தை போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார்.

அடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளை தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையை காரணமாக காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதை கூட வாங்கி தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..!
முருக சிவகுமார் (murugasivakumar)
உலக அரங்கில் பல்வேறு பெருமைகளை நம் நாடு பெற்றிருப்பதாக மார்தட்டிகொள்கிறோம். அதையெல்லாம் தூர தள்ளுகிற ஒரு செயல் புரையோடிக் கிடப்பதை கண்டு நாம் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டியிருக்கிறது. அத்தகைய நிலைக்கு நமது ஆட்சியாளர்களும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களுமே காரணம் என்பதுதான் வருந்தத்தக்கது. அந்த பெரும் கொடுஞ்செயல் ஊழலை தவிர வேறில்லை!

தனிமனிதர் ஒழுக்கமும் மக்களின் பண்பும்’ என்ற தலைப்பில் நடந்த கருதரங்கில் பேசிய நமது துணை குடியரசு தலைவர் தமீம் அன்சாரி, பொதுமக்களின் சேவையில், குடிமைச் சேவைகள், சட்டம் மற்றும் நீதி ஆகிய மூன்று துறைகளில் ஒழுக்கப் பண்பாடு என்பது இன்று மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பொது வாழ்வில் ஊழல் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார். அதோடு நில்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஊழல் அதிகரித்ததன் விளைவாக கருப்புப் பண உற்பத்தி, கவலை தரும் பொருளாதார குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஊழல்கள், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்ற வடிவங்களில் சாதாரண பொதுமக்கள் அனுபவிப்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கவலை குடியரசு துணைத் தலைவருக்கு மட்டும் இருப்பதாக யாரும் கருதிவிட வேண்டாம். நம் நாட்டில் வாழ்கிற கடைக்கோடி குப்பன், சுப்பன் வரை அத்தனை பேருக்குமே அந்தக் கவலை இருந்து வருகிறது. காரணம், நம் நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை பணம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் கையூட்டுப் பணம் கொடுப்பவரின் எண்ணிக்கையும், அதை வாங்கும் அதிகார மட்டத்தினர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

பணம் பாதாளம் வரை பாயும் என்று யாரோ சொல்லிய பழமொழி இன்று நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையாகவே இருந்து வருகிறது. அலுவலகத்தில் ஒரு வேலை ஆகவேண்டி சென்றால், கடை நிலை ஊழியரில் தொடங்கி அத்துறை தலைமை வரை அளந்து கொடுத்தாக வேண்டும். பணம் கொடுக்காவிட்டால், அது இல்லை; இது இல்லை என்று சொல்லி பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு, ஆண்டுகள் உருண்டோடினாலும் அது நம் கைக்கு வந்து சேரவே சேராது. இந்த நிலையை நம் நாட்டில் உள்ள யாரும் மறுப்பதற்கில்லை.

வானம் பார்த்த பூமியே உலகமென எண்ணி வாழ்கிற ஏழை உழைப்பாளியின் மகள் திருமணத்திற்கு உதவியாக இருக்குமென மாநில அரசு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தையும், கருவுற்ற பெண்களுக்கு உதவித் தொகை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு திட்டமும் முழுமையாக சேராத நம் நாட்டில் கிராமப்புற ஏழை பெண்களுக்கான இந்த உதவித் தொகை திட்டங்களும் சேருமா என்ன? முழுமையாக கிடைப்பதில்லை. அதிகாரிகள் மத்தியில் பரவியிருக்கிற ஊழல் என்னும் விஷமே இந்த நிலைக்கு காரணம். அதிகாரிகள் கேட்கிற கையூட்டு பணத்தை கொடுக்காததால், உதவித் தொகைக்கு விண்ணப்பித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து அது நடக்கும்போது கூட திருமண உதவித் தொகை கிடைப்பதில்லை என்பது வெட்கக்கேடானது.

சாதியற்ற சமூகம் உருவாக வேண்டுமானால், அகமண முறை ஒழிந்து புறமண முறை பல்கி பெருக வேண்டும் என்று சமூகவியல் ஆய்வாளர் அம்பேத்கர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன் பேரில் சாதிகளை கடந்து வந்து சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையருக்கு உதவித் தொகையை அரசு அறிவித்திருக்கிறது. இந்த உதவித் தொகை அவர்களுக்கு கிடைக்காமல் முடக்குவதற்கு லஞ்சம் பேராயுதமாக அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வக்கிர மனம் கொண்ட சாதி இந்துக்களின் எண்ணம் ஈடேற்றம் அடைகிறது!

இப்படி அரசு துறை அலுவலகங்களில் கையூட்டு புழங்குவதை அரசு அறிந்திருக்காமல் இல்லை. ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கும் அரசின் முயற்சி அவ்வப்போது வெளியே தெரியாமலில்லை. ஊழல் ஒழிப்பு துறை அதிகாரிகளால் நாள்தோறும் பல ஊழல் பெருச்சாலிகள் - அதிகாரிகள் கைது செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது. அத்தகைய கைது நடவடிக்கையால் ஏதேனும் பயன் விளைந்ததுண்டா? இல்லைவே இல்லை.

ரூ.2500 இலஞ்சம்: கள்ளக்குறிச்சி மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது, ரூ. 2,000 இலஞ்சம்: மின் வாரிய அலுவலர்கள் இருவர் கைது, இலஞ்சம் வாங்கிய வன அதிகாரிகள் 2 பேர் கைது, ரூ. 500 இலஞ்சம் வாங்கிய விழுப்புரம் நர்ஸ் கைது, 17.45 இலட்சம் ரூபாய் கையாடல் கூட்டுறவு வங்கி செயலர் கைது, கர்ப்பிணி உதவித்தொகை வழங்க இலஞ்சம் வாங்கியதாக நர்சு மீது வழக்கு, இலஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது, ரூ.50 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கைது..... இப்படி நாள்தோறும் ஊழல் செய்த - கையூட்டு பெற்ற பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள்.

கைது... வீட்டில் சோதனை, ஆவணங்கள் கைப்பற்றல், பணியிடை நீக்கம்... மீண்டும் பணி... இதுதான் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீதான தற்போதைய நடவடிக்கைகள். இந்த நடவடிக்கைகளால் எந்தவொரு அதிகாரியும் அச்சமடைந்து கையூட்டு வாங்காமல் இருப்பதில்லை. ஊழல் அதிகாரிகளுக்கு பெரிய தண்டனை ஏதும் வழங்கப்படுவதில்லை என்பதால்தான் மற்ற அதிகாரிகள் அச்சப்படாமல் தங்களது ஊழல் பணியை தொடர்கிறார்கள். இப்படி நடப்பதால்தான் உணவில் தொடங்கி உயிரை காக்கும் மருந்துகள் வரை காலாவதிகளும் கலப்படங்களும் புகுந்திருக்கின்றன. இந்தக் கொடுஞ்செயலை செய்த கொலையாளிகள் அரசதிகாரிகளின் துணையின்றி துணிந்து செய்திருக்க முடியுமா? ஏராளமான அப்பாவி உயிர்கள் செத்து மாண்டாலும் பரவாயில்லை; பல கோடிகளை சேர்த்து வைத்து சுகமான வாழ்வை அனுபவித்து, மீதியானதை பிள்ளைகளுக்கு விட்டு செல்வது என்ற இலக்கு மட்டுமே ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட யாராலுமே முடியாதா? என்ற கேள்விக்கு ஒரே விடை ஆழ தேடி வேரறுப்பது. அதாவது ஒரு விஷச் செடியை அழிக்க வேண்டுமானால் கிளை நுனிகளை முறித்துவிட்டால் மட்டும் போதாது, அதன் வேர் பகுதியை தோண்டி முழுவதுமாக அழிக்க வேண்டும். அது போலவே நம் நாட்டிலும் சமுதாயத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் என்னும் அரக்கனை அழிக்கவும் வேண்டும். இதற்காக துணிச்சலான அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அந்த நடவடிக்கையை கண்டு ஊழல் பெருச்சாலிகள் கொந்தளிக்கக் கூடும். அவர்கள் என்ன செய்தாலும் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.

நடவடிக்கையை யார் எடுப்பது? - அரசும் ஆட்சியாளர்களும் தான்!

ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்படுகிற ஊழல் செய்யும் அதிகாரிகள், ஆட்சியாளர்களின் உதவியை நாடி மீண்டும் பணிக்கு திரும்பிவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். ஊழல் செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டால், வழக்கு விசாரணை ஏதுமின்றி அந்த இலஞ்சம் வாங்கிய அதிகாரியை மீண்டும் பணியில் எங்கும் சேராதபடி பணி நீக்கம் செய்ய வேண்டும். அதோடு நில்லாமல் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் கண்டறிந்து அரசுடைமையாக்க வேண்டும். அப்போதுதாவது அதிகாரிகள் திருந்துவார்களா? என்பதை பார்ப்போம்.

கடை நிலை பதவி - உயர் பதவி, அதிகாரிகள் - ஆட்சியாளர்கள் என வலைப்பின்னலாக இருக்கிற இந்த ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டுவருவார்கள் என்று சொன்னால் பொதுமக்கள் சிரிக்கிறார்கள். வேறென்ன சாதாரண மக்களால் செய்ய முடியும்!
முருக சிவகுமார் (murugasivakumar)
அடித்தளத்தில் வாழ்கிறவ்ர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் குரல் இந்திய சமுதாயத்தில் செவிசாய்க்கப்படாது; வெற்றிபெறாது என்பது மகளிர் மசோதா மூலம் மீண்டுமொரு முறை நிரூபிக்கப்படவிருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக என்ன காரணத்துக்காக சமூகநீதி கொள்கையுடையவர்களால் எதிர்க்கப்பட்டதோ, அந்த எதிர்ப்புக்கு கிஞ்சித்தும் சுணங்காத அதிகாரச் சமூகம் அதே நிலையில் மகளிர் மசோதாவை செயல்படுத்தவிருப்பது வேதனையானது.

2009 ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ‘மகளிர் மசோதாவை இதே வடிவில் கொண்டுவந்தால் இதை எதிர்க்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எங்கள் கட்சிக்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த அவையிலேயே நான் விஷம் குடித்து இறப்பேன், மசோதாவை நிறைவேற்ற விடமாட்டேன்’ என்றார்.

இப்படியாக மகளிர் மசோதாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிறைவேற்றப்படாமலே இருந்தது. இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்து பின்னர் அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மகளிர் உரிமை நாளாக மார்ச் 8 அன்று இந்திய பெண்களுக்கான பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.இந்த சட்ட மசோதாவை மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்களால் நிருவகிக்கப்படுகிற காங்கிரசு, பாஜக, இடதுசாரிகள் கட்சிகள் ஆதரிக்கின்றன.

அதேசமயம், லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் கட்சிகள் எதிர்கின்றன. அவர்கள் எதிர்த்தாலும் மசோதா நிறைவேறப் போவது உறுதி. சிற்றூர்ப்புறங்களில் சொல்லப்படும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்ற சொலவடை உறுதியாகியிருப்பது வருந்தத்தக்கது.ஆனால், இந்த நிலை தொடருவது நல்லதல்ல என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

இந்நிலையில் மகளிர் மசோதவை தடுத்து நிறுத்துபவர்கள் அனைவரும் ஆணாதிக்கவாதிகள் - சமூகநலனுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை பெண்ணியவாதிகளும், மசோதாவை ஆதரிப்பவர்களும் பரப்பிவருகின்றனர்.

ஜூன் 16, 2009 அன்று 'ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கை அதிகரித்தல்' என்ற கருத்தரங்கை திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி துவக்கி வைத்து பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் சிலர் விஷம் குடிப்பேன் என்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அந்தளவுக்கு ஆணாதிக்கம் இருக்கிறது. அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு போக மீதியுள்ள இடங்களை பெண்களுக்கு தரலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அரசியல் ஆண்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. அதில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும்” என்று அரைவேக்காட்டுத்தனமாக சொல்லியிருக்கிறார்.

இப்படியான கருத்தை பரப்பியதும் பரப்பி வருவதும் கேடுகெட்ட அரசியல் வித்தை என்ற நிலையில் மகளிர் மசோதா குறித்தும், எதிர் - ஆதரவு கருத்து குறித்தும் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு அரசியல் தலைவரின் மகளாக பிறந்து, முதலமைச்சரின் குமரியாக வளர்ந்து, வசதியாக மாப்பிளைக்கு மனைவியாகி சுகபோக வாழ்க்கை நடத்திய பின்னர் திடீரென்று எம்.பியாக அவதாரமெடுத்து நாடாளும் மன்ற கட்டடத்தில் நுழைந்த அரசிளங்குமரி கனிமொழி சரத் யாதவை ஆணாதிக்கவாதி என்று திட்டியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாவம், அவர் வளர்ந்த சூழல் அப்படி. சரத் யாதவின் கருத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்ளும் திராணியற்றவர் கனிமொழி என்பதுதான் உண்மை.

இத்தருணத்தில் மகளிர் மசோதா பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசாமல் ஒரு கருத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மசோதாவை எதிர்ப்பவர்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்ற கேடுகெட்ட எண்ணத்தால் எதிர்க்கவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்துவிட்டு, அந்த மசோதாவை நிறைவேற்றுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் எண்ணமும், செயல்பாடும் தவறா? அதை தவறென்று நினைப்பவர்கள் அனைவரும் அடித்தளத்தில் வாழ்பவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஆதிக்கவாதிகள் என்று பழியை சுமக்க வேண்டியவர்கள். சமூகத்தை முழுவதுமாக அறியாத பலரும் மகளிர் மசோதா பற்றி பேசுவது வேதனையானது.

உள் இட ஒதுக்கீடு ஏன் தேவை?

சாதிகளாலும், பொருளாதார படிநிலையாலும் பிரிந்து கிடக்கிற இந்திய சமூகத்தில் வாழ்கிற பெண்கள் எல்லோரும் ஒரே நிலையில் வாழ்கிறார்களா? என்ற கேள்விக்கு இல்லைவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், எத்தனையோ இலட்சம் பெண்கள் இந்தியாவில் அரவமற்று வாழ்கை தேடிக்கொண்டே கிடக்கிறார்கள்.

சாதி, பணம், மதம், சடங்கு, ஆண் உள்ளிட்ட கருத்தியல்களின் கீழ் பெண்கள் மண்டியிட்டு கிடக்கும் அளவுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் எல்லா பெண்களையும், ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கலாமா? அப்படி பார்க்கும் பார்வை சரியானதா? என்றால், அது நிச்சயமாக சிறந்த பார்வையாக இருக்க முடியாது.

ஆதிக்கசாதிகளின் தெருவில்கூட தலித் நடக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஊர்களும், அன்றாடங்காய்ச்சி கூலி தலித்துகள் சாதிகளின் நெருக்குதல்களில் சிக்குண்டு மூச்சுதிணற முழிபிதுங்கி கிடக்கிற ஊர்களும் இந்தியாவில் ஏராளமாக காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நம் சமூகத்தில் வாழ்கிற பெண்களை (1) கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, அடித்தள பெண்கள்; (2) பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள்; (3)சாதியால் ஒடுக்கப்பட்ட இன பெண்கள் என்று மூன்று வகையாக பகுக்கலாம். உயர்குடியில் பிறந்த பெண்களுக்கு, இந்த சமூகத்தில் விரவிக்கிடக்கிற வாய்ப்பும் வசதிகளும் கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு கிடைத்ததில்லை. அந்த கிராமப்புற பிற்படுத்தப்பட்ட பெண்களை காட்டிலும், சாதியால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட தலித் பெண்களின் இருப்பு ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் வேதனையிலும் உறைந்து கிடக்கிறது.

தலித் பெண்கள்: ஓலைகுடிசையில் சாணித் தரையில் பிறந்து, செங்காட்டு மண்ணில் புரண்டு, ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு வந்து, ஒரு பண்ணையாரிடம் அடிமை ஆளாக இருக்கிற ஆணுக்கு வாக்கப்பட்டு, புள்ளக்குட்டிகளோடு, வானம்பார்த்த நிலத்தை மொட்ட களைவெட்டியால் கொத்திக்கொண்டும், மொன்ன அரிவாளால் அறுப்பு அறுத்துக் கொண்டும் அரை வயிறு கஞ்ச குடித்து வாழ்நாளை கழித்து மடிந்துபோகிறார்கள்.

தலித் அல்லாத பெண்கள்: ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை உறிஞ்சி காசுகளாகவும், நகைகளாகவும் குவித்துள்ள வீட்டில் பிறந்து கான்கிரீட் தரையிலும், தொட்டிலிலும் வளர்ந்து, பொம்மைகளோடு விளையாடி, பத்து ஊரை கடந்து சென்றாவது நல்ல பள்ளியில் படித்துவிட்டு, அப்பா - அண்ணண்கள் கடைக்கண் கருணையோடு பணம் படைத்தவனுக்கு வாக்கப்பட்டு, வேலையாட்களை மெய்க்கும் பொறுப்பை ஏற்று, பஞ்சு மெத்தையில் தூங்கி பாலும் சோறும் தின்று, உழைக்காமலே உடலை வளர்த்து, பணத்தால் இறப்பு நாளை தள்ளி போட்டு வாழ்கிறவர்கள்.

வசதிபடைத்த குடும்ப பெண்கள்: சுகத்தில் வளர்ந்து, பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக மட்டுமே பணம் கட்டியாவது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் உறங்கும் நேரம், தொலைக்காட்சி பார்க்கும் நேரம் போக, மீதி பொழுதை போக்க உதட்டு சாயத்துடன் மகளிர் மன்றங்களிலும், கட்சிகளிலும் வலம் வந்து வாழ்கிறவர்கள்.

இம்மூன்று தரப்பினரையும் ஒருசேர பார்ப்பவர்கள் மனநோயாளிகளாகதான் இருப்பார்கள்.

ஆதிக்கசாதி குடியில் பிறந்த பெண்களுக்கு அவர்களின் அப்பா, அண்ணன்கள் உறுதுணையாக இருந்து பலரது உழைப்பை சுரண்டியாவது வாழ்நாள் முழுவதும் வசதியாகவே வாழ வகை செய்வார்கள். ஆனால், உழைத்தும் அதற்கேற்ப கூலி வழங்கப்படாத இந்த சாதிய - முதலாளிய சமுதாயத்தில் அடிமைகளாக வாழ்க்கை நடத்துகிற அப்பா, அண்ணண்கள் இருக்கும்போதும், தான் வாழ்வதற்கான வகையை தானே தேடி நிலக்கிழார்களின் கொல்லைகளில் வயிறுகூட நிரப்ப போதாத கூலிக்கு வாழ்நாளை ஒப்புகொடுத்துவிட்டு, பிள்ளை, குட்டிகளோடும், உறவுகளோடும் இழுபடுகிற தலித் பெண்களுக்கு யாரும் துணை வருவதில்லை.

”ஊர் குருவி ஒசர பறந்தாலும், பருந்தாகாது” என்று சாதியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட மொழியை போல, இத்தடைகளையெல்லாம் மீறி அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் பயனால் வாழ்வின் பற்றுக்கோடென படிப்பை எண்ணி படித்துவிட்டு வெளியே வரும் தலித் பெண்கள், வேலை செய்கிற இடங்களில் சாதிய மனநோயாளிகளிடம் சிக்குண்டு மன உளைச்சலில் கிடக்கிறார்கள். வேலை செய்கிற இடங்களில் தலித் பெண்களை உளைச்சலில் ஆழ்த்துகிற ஆதிக்கசாதி ஆண்களுக்கு சளைக்காதவர்களாக ஆதிக்கச்சாதி பெண்களும் இருந்து வருகின்றனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

ஆதிக்கசாதி இனத்திலும், பொருளாதார வசதிபடைத்த இனத்திலும் பிறந்த பெண்களுக்கு ஆணாதிக்க சமுதாயத்தில் பல கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அதை எதிர்கிற முற்போக்காளர்களில் பலர் அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களை, ஆதிக்க சாதி பெண்கள் நடத்துகிற விதத்தை கண்டிப்பதே இல்லை.

இந்நிலையில், ஒரு தலித் பெண்ணையும், ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணையும், ஒரு மேட்டுக்குடி பெண்ணையும் ஒரு தளத்தில் வைத்து பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனத்தை பணம் படைத்தவர்களும், மேட்டுக்குடிகளும் நிரம்பிக்கிடக்கிற நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றவிருக்கிறார்கள்.

கருணாநிதியின் கருத்து

இதனை எதிர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிற முதலமைச்சர் கருணாநிதி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ அதைதான் பொதுக்கருத்தென ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி, “மகளிர் மசோதா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பெரும்பாமையோரின் கருத்தை பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ள சொல்கிற கருணாநிதியின் கருத்து பெரும் ஆபத்தானது. இதே நிலைப்பாட்டை சாதியிலும், ஆன்மீகத்திலும் பொருத்தி பார்த்து பெரும்பான்மையோரின் கருத்தை பொதுக்கருத்தை ஏற்றுக்கொள்ளலாமா? என்பதையும் அவர் விளக்கினால் குழப்பம் விலகும். பதவியையும் சொத்துக்களையும் நிலைநிறுத்திகொள்ள எதை வேண்டுமானாலும் பேசும் நிலைக்கு திராவிட தலைவர் கலைஞர் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

மகளிருக்கு இடங்களை ஒதுக்குவதற்காக மசோதாவைக் கொண்டு வருகிறபோது, அந்த இடங்களை யாரெல்லாம் கைப்பற்றுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும், உதட்டுசாயம் பூசிக் கொண்டு கிளப்புகளில் வலம் வருகிற மேட்டுக்குடி பெண்களுக்கும், வசதியான குடும்ப பெண்களுக்கும் 33% இட ஒதுக்கீடு பயன்பட போகிறது. இவர்களை கடந்து, கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களோ, அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கேற்கவே முடியாது என்பதுதான் உண்மை.

இந்த நிலை ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் தலித் பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் தனித் தனி உள் இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடித்தள பெண்கள் மீது மேட்டுக்குடி சமூகம் கட்டவிழ்த்துவிடும் வன்முறையின் வடிவமாக மகளிர் மசோதாவை பார்க்கலாம்.

எதிர்காலத்திலாவது அடித்தளத்தில் வாழ்கிற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகார வர்க்கத்தினர் முன்வரும் வரை இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது தேவையாகிறது.
முருக சிவகுமார் (murugasivakumar)


னந்த விகடன் பொங்கல் சிறப்பிதழில் வெளியாகியுள்ள விகடன் வரவேற்பறையில் என்னுடைய "சாக்கியபுத்தன்" வலைப்பூ குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. என் வலைப்பூவை அங்கீகரித்த விகடன் குழுமத்திற்கும், விகடன் ஊழியர்களுக்கும் நன்றிகள்.

இரு கை ஓசை! என்ற தலைப்பில்,

"தலித்தியத்தையும், பவுத்தத்தையும் முன்னிறுத்தும் வலைப்பூ. சமூக நிகழ்வுகளை தலித்தியப் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரைகள் நிறைந்திருக்கின்றன. தலித் மக்களின் நலவாழ்வுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியை சமத்துவபுரம் போன்ற திட்டங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசின் நிலை, ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் அவலங்கள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் எனப் பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் கண் சிமிட்டுகின்றன!"

- என்று சமூக மாற்றத்திற்கான வலைப்பூ என அடையாளப்படுத்தி பதிவு செய்துள்ள விகடனுக்கும், அதன் ஊழியர்களுக்கும் நன்றிகள்.

இந்த தருணத்தில், என் வலைப்பூவை கண்டு பதிவுகளை படித்துவரும் வாசக நண்பர்களுக்கும், பின்னூட்டமிடும் - ஓட்டுப் போடும் தோழர்களுக்கும் சமீபத்தின் நட்சத்திர பதிவராக தெரிவு செய்த தமிழ்மணம் இணையத்திற்கும், தமிழிஷ் உள்ளிட்ட பதிவு திரட்டிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். இந்த வலைப்பூ ஆக்கத்தில் உதவிய தோழர் ஸ்ரீதருக்கு சிறப்பு நன்றி.
முருக சிவகுமார் (murugasivakumar)
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கட்காரி பிராமணர் சாதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதே போல, வியாழன்று மக்களவை எதிர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து எல்.கே.அத்வானியை விலக வைத்து, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் தேர்வு செய்யப்பட்டிருகிறார். அவரும் பிராமணர் சாதியை சேர்ந்தவர்.

இது வரையில் பாரதிய ஜனதா கட்சின் தேசிய தலைவராக இருந்த இராஜ்நாத் சிங் வயது 76. எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்த எல்.கே.அத்வானிக்கு வயது 83 என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சிக்கு புதிய இரத்தம் செலுத்தப்பட வேண்டும். அதுவும் இளம் இரத்தம் செலுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவிக்கு கட்காரியும், எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சுஷ்மா சுவராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிப்படையாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம், பதவி விலகியிருக்கும் இராஜ்நாத் சிங்கும் அத்வானியும் பிராமணர் அல்லாதவர்கள். புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்காரியும், சுஷ்மாவும் பிராமணர்கள்.

பா.ஜ.க.வை பொறுத்த வரையில் அது முன்னேறிய வகுப்பினரின் கட்சி என்றும், குறிப்பாக, பிராமணத் தலைவர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சி என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், பிராமணர் அல்லாத இராஜ்நாத் சிங்கும் அத்வானியும் முக்கிய தலைமை பதவியில் இருப்பதை பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. இளம் தலைவர்கள் கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை மீண்டும் பா.ஜ.க.வை பிராமணத் தலைவர்களின் ஆதிக்கத்தில் கொண்டுவர திரைமறைவில் திட்டமிட்டு, அதை சாதித்து கொண்டுள்ளது.

பா.ஜ.க. தலைவராக இருக்கும் நிதின் கட்காரி மராட்டியத்தை சேர்ந்த பிராமணர். அம்மாநில பா.ஜ.க. தலைவராக இருந்து வந்தார். முன்பு இம்மாநிலத்தில் இருந்த பா.ஜ.க. சிவசேனை கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

சுஷ்மா சுவராஜ் முன்பு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி நடுவண் ஆட்சியில் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்தவர்.

அண்மையில் கருநாடக மாநிலத்தில் குவாரி ஊழல் பண முதலைகளான அமைச்சர்கள் கருணாகரன், ஜனார்த்தனன் ஆகியோர் செய்த ஊழலை தட்டி கேட்டதாலே எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்க அவர்கள் முடிவெடுத்து, பணத்தால் சதித் திட்டம் தீட்டினர். அப்போது, சமாதானம் செய்வதாக கூறி எடியூரப்பாவை ஊழல் முதலைகளுக்கு பணியவைத்த பெருமை சுஷ்மா சுவராஜுக்கே உரியது. காரணம், அந்த பணமுதலைகளோடு சேர்ந்து சுஷ்மா என்ற முதலையும் பணத்தை பெருக்கிவருவதாக கூறப்படுகிறது.

அத்வானியின் பிறந்த நாளில் சமாதானம் நாடகத்தை நடத்தி தன்னை வலிமையானவராக காட்டிக் கொண்ட சுஷ்மா இப்போது, அத்வானியை தள்ளிவிட்டு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். இதுவெல்லாம் அந்த சாதிக்கு புதிதல்லதானே?

பிற்போக்குவாத முட்டாள்களின் அமைப்புக்கு எந்த முட்டாள் தலைமை பதவிக்கு வந்தால் என்ன?

இதில் உச்சகட்ட நகைச்சுவை என்ன தெரியுமா? பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்ற கட்காரி பேசுகையில், தலித்துகளுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுவேன் என்று கூறினார். ஆடுகளை ஓநாய் பாதுகாப்பதாக சொல்வதை யாராவது நம்புவார்களா? அப்படி நம்பினால், டாக்டர் அம்பேத்கர் சொல்லில் சொல்வதானால், அவர்களெல்லாம் பலியாடுகள்!
முருக சிவகுமார் (murugasivakumar)

இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சுதந்திரமான - நேர்மையான தேர்தல்கள் நடைபெறுவதற்கு வகை செய்கிறது. இதில், சுதந்திரமான தேர்தல் என்பதற்கு பொருள் - எந்தத் தரப்பில் இருந்தும் எந்தவிதமான குறுக்கீட்டுக்கும் இடம்தராத தேர்தல் என்பதாகும். நேர்மையான தேர்தல் என்றால், பாரபட்சமில்லாத சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் தேர்தல் என்பதாகும்.

அச் சட்டத்தின் விதிகளின்படி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களை வசீகரிக்கக்கூடிய - அரசுக்கு, ஆளுங்கட்சிக்கு ஆதரவை தூண்டக்கூடிய எந்தவிதமான புதிய கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ அரசு அறிவிப்பதும் - பணத்தையோ, பொருட்களையோ கொடுப்பதும் சட்டவிரோதமாகும்.

அதிகார வேட்டையே நவீன அரசியலில் ஆதாரச் சுருதியாக மாறிவிட்ட பிறகு, அரசின் அதிகாரத்தை பயன்படுத்தியும், பண பலத்தை பயன்படுத்தியும் மக்களிடம் தேர்தலை சந்திப்பதென்பது நம் நாட்டில் வழக்கமாகவே இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் சமயங்களிலெல்லாம் பிரதான கட்சிகளான தி.மு.க.,வும் அ.தி.மு.க.வும் மக்களை உபசரிப்பதாக மாறிமாறி குற்றம்சாற்றுவது வழக்கம். அது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பெட்டியை திறந்துவைத்து கொண்டு, அதில் இருந்த கட்டுக்கட்டான பணத்தை வாக்களர்களாகிய மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரேன் ஆனந்த் சின்கா கையும் களவுமாக பிடித்து பணத்தை கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனாலும், நேர்மையான தேர்தல் நடைபெறாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கிய அந்த அரசியல் பிரமுகருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இதுதான் நம் நாட்டில் நிலவும் போக்கு.

தமிழகத்தில் வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய இரு தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலிலும் மக்களை வசீகரித்து ஓட்டுகளை பொறுக்க தி.மு.க.,வும் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு வழக்கம் போலவே பணம் வழங்குவதும் மூக்குத்தி, குடம் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதும் நடைபெற்று வருவதாக தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றம்சாற்றியுள்ளது. அதேபோல், அ.தி.மு.க.வினர் பணம் வழங்குவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்ததால் செங்கோட்டையனும் ஓ.பன்னீர்ச்செல்வமும் தங்கியிருந்த விடுதியில் காவல்துறையினரோடு தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த மாதியான விசயங்கள் வழக்கமாக நடக்கும்; தவறே செய்திருந்தாலும் வெறு கண்டனத்தோடு தேர்தல் ஆணையம் நிறுத்திக்கொள்ளும்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று பல வினோதமான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஆத்தூர் சிற்றூரில் தி.மு.க. தேர்தல் அலுவலகம் அருகில் திடீரென்று ஒரு அசைவ உணவகம் உருவாகியிருக்கிறதாம். தேர்தல் சிறப்பு அசைவ உணவகம் என்று இதற்கு பெயர் சூட்டி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு சிறிய உணவு விடுதியாக காட்சியளித்தாலும் காலை, பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில் வழங்கப்படும் அசைவ உணவு வகைகளை பார்க்கும்போது பெரிய நட்சத்திர உணவு விடுதிகளை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது.

உள்ளூர் தி.மு.க. நிருவாகி ஒருவரால் இந்த திடீர் உணவு விடுதி நடத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும் அங்குள்ள இன்னொரு உணவு விடுதியின் உரிமையாளரிடம் கேட்டபோது, இந்த திடீர் உணவு விடுதியின் உரிமையாளர் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. என்று கூறுகிறாராம். வடக்கு ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சிற்றூர்ப்புறங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினர் மற்றும் இந்த விடுதிக்கு வரும் கட்சி சார்பற்ற பொதுமக்கள் ஆகியோர் நாள்தோறும் 3 வேளையும் மூக்குமுட்ட சாப்பிட்டு செல்கிறார்கள் என்று உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

காலையில் இடியாப்பம் பாயா, கொத்து புரோட்டா, ஆப்பம்; மாலையில் விதவிதமான பிரியாணி வகைகள் அத்துடன் சாதம், கோழிக் குழம்பு, மீன் குழம்பு, மட்டன் குழம்பு; இரவில் சாப்பாடு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அசைவ சாப்பாடு, இல்லையேல் அசைவ வகைகளுடன் இட்லி, தோசை. ஒவ்வொரு நாளும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் சாப்பாட்டுக்கான அடையாள டோக்கன்கள் வழங்கப்படுகிறதாம். அந்த டோக்கன்களை கொடுத்துவிட்டு எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

ஊரில் சில குடும்பங்கள் தமது முன்னோர் பெருமையை கூறும்போது, “எங்க குடும்பம் தின்னு கெட்ட குடும்பம்” என்று சொல்வார்கள். அது போலவே, திருச்செந்தூர் தொகுதியில் நடப்பதை பார்க்கும்போது, அத்தொகுதிமக்கள் “தின்னு கெட்ட குடும்பங்களாக” திகைத்து நிற்க போகிறார்கள் என்பதில் ஐயமில்லை. மக்கள் எப்போது தங்களது ஓட்டுகளின் மதிப்பை உணருகிறார்களோ அப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் நம் நாட்டில் உருவாகும். அது வரை நம்மை பண முதலாளிகளும் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் ஆண்டுகொண்டுதான் இருப்பார்கள்.

நவீன அரசியலின் ஆதாரச் சுருதியாக மாறிவிட்ட வாக்காளர்களுக்கான உபசரிப்பு, பெரும் ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவந்தபோதிலும் அது அரசியல் கலாசாரமாகவே தொடர்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் நமது ஜனநாயகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பெரும் தவறு நடந்திருக்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். சமூகம் நல்ல திசையில் செல்ல வேண்டும் என்று விருப்பம் கொண்டு செயல்பட்டு வருகிற சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பேரவைக்கு செல்ல முடியுமா? முடியவே முடியாது. காரணம், பண பலத்துக்கும் படை பலத்துக்கும் தங்களை அடகு வைத்து விட்டு ஏமாளிகளாகவே இருக்க மக்கள் பழகிவிட்டார்கள்.

மக்களின் இந்த மனநிலையை உணர்ந்ததால்தான் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றிபெற்றுவிட்டால், பணம் சம்பாதிப்பதிலும் சொத்துக்களை வாங்கி போடுவதிலும் மட்டுமே கவனத்தை செலுத்துகின்றனர். பணத்துக்கும் மதுவுக்கும் இலவசங்களுக்கும் ஓட்டுகள் கிடைக்கிற போது அரசியல்வாதிகள் மக்கள் நலனில் ஏன் அக்கறை காட்ட வேண்டும்? மக்களின் மனமாற்றம் மட்டுமே சிறந்த ஜனநாயகத்தை ஏற்படுத்தும். ஆகவே இது குறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டியிருக்கிறது.
முருக சிவகுமார் (murugasivakumar)
இந்தியாவில் தலித்து மக்கள் அனைத்து நிலைகளிலும் வஞ்சிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, அவர்களுக்கு ஆதிக்கச் சாதிகள் செய்யும் கொடுமைகளை விட அரசாங்கம் செய்து வரும் வன்கொடுமைகளை அதிகம். காரணம், இந்த ஆட்சியும், அதிகார மையங்களும் சாதிவாதிகளால்தான் ஆளப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக இருப்பது உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றில் உணவு இல்லாமல் பட்டினியோடு காலத்தை கழிக்க முடியும். அது நம் நாட்டில் இயல்பானதுதான். இந்தியாவின் மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் வயிறார சாப்பிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் இராப்பட்டினியாகவே உறங்கச் செல்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அடுத்து, உடை - பழைய கந்தல் துணியையாவது துவைத்து துவைத்து கட்டிக் கொள்ளலாம். வறுமையின் உச்சத்தை வெளிச்சம்போட்டு வெளிப்படுத்துவதாக அரை நிர்வாணத்தோடு அலையும் மனிதர்கள் நம் சமுதாயத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.


அடுத்து, மூன்றாவதாக இருப்பிடம். உணவு, உடை இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் என்ற நிலையிலும் படுத்துறங்க இருப்பிடம் ஒன்று இல்லையெனில் வாழ்க்கை நரகமாகவே மாறிவிடும்.

பெரிய மாளிகை போன்ற வீடுகளை கட்டி வைத்துவிட்டு குடியிருக்காமல், கட்டி சாத்திவிட்டு கிடக்கும் வீடுகளை சென்னை உள்ளிட்ட நகரங்களில் காணலாம். அல்லது, இரண்டு மூன்று பேருக்கு 10 அறைகளுக்கு மேல் 4 மாடிகள் கட்டி ஆட்கள் நடமாட்டமின்றி பல அறைகள் கிடக்கின்றன. இவ்வாறாக, ஆறு மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகள் - ஆட்கள் வசிக்காத வீடுகளை கைப்பற்றி வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்க தனி சட்டம் கொண்டு வந்தால் நல்லாதான் இருக்கும். ஏனெனில், சிலர் வணிகம், அரசியல் போன்ற தொழில்களை செய்து, மக்களை ஏமாற்றி அளவுக்கு மீறி சொத்துக்களை அமுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில், படுத்துறங்க வீடு என்று சொல்லுபடியான ஒரு இடம் இல்லாததால் பல குடும்பங்கள், சாலையோரங்களில் பிள்ளை குட்டிகளுடன் காலத்தை கழித்தபடி கிடக்கின்றன.

கிராமப் புறங்களில் பார்த்தோமானால், வயல்களில் எளிதாக கிடைக்கிற கரும்பு தோகையையும், தென்னங்கீற்றுகளையும் நிலக்கிழார்களிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி கொண்டு வந்து கூரையாக வேய்து, மண்ணை பிசைந்து கற்களை வைத்து குடிசைகளை அமைத்து வாழும் மக்களை காணலாம். அந்தக் குடிசைகளில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கூரை பொத்தலாகி போய் இரவுகளில் முற்றத்தில் நிலா எட்டிப் பார்த்தபடி இருக்கும். மழை பெய்யும் காலங்களில் ஒரு ஓரத்தில் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு, சொம்பு, தட்டு, ஈய ஏனம் ஆகியவற்றை வைத்து மழைநீரை பிடித்தபடி இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் எண்ணற்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இத்தகைய கொடுமைகளையெல்லாம், காலம் காலமாக உழைத்து தம் உழைப்பின் வழியாக பலரின் வாழ்வை சுகமாக்கிய தலித் மக்களே பெரும்பாலும் அனுபவித்து வருகிறார்கள்.


இந்த நிலையை போக்கி அனைத்து மக்களுக்குமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளும் அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்புடன்தான் தலித் மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்கென மத்திய அரசு அன்னை இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தை உருவாக்கியது. அதன் மூலம் 1980-க்கு பிறகு தலித் மக்களுக்கு 4 பேர் படுக்கும் அளவுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவழிக்காத சூழலில், தலித்துகளுக்கு வீடுகளை கட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் முறையாக செலவிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான பல ஆயிரம் ரூபாயில் ஆளுங்கட்சியினரும், அலுவலர்களும் பெரும் தொகையை தமது பங்காக எடுத்து கொண்டு, குறைந்த தொகையில் வீடுகள் கட்டித் தருகிறார்கள்.

அவ்வாறு கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள் பலவும் அடுத்த மழைக்கே தாங்காமல் ஒழுகும் அவல நிலையில் இருந்தன. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தலித் கான்கிரீட் வீடுகள் இப்போது பல இடங்களிலும் மேற்கூரை இடிந்துவிழுகின்றன.


காலம் முழுவதும் ஓய்வின்றி உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் தலித் மக்களுக்கு வழங்கப்படாத இந்தச் சமுதாயத்தில், பெரும்பாலான தலித்துகள் அன்றாடம் காய்ச்சிகளாகவே வாழ்கிறார்கள் அல்லது வாழ்வின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் முதலாளிகளிடம் கடனாக சில நூறுகளை வாங்கிவிட்டு, அதற்கு பல ஆயிரங்களை வட்டியாக கட்டிக்கொண்டு கடனாளிகளாகவே கிடக்கிறார்கள்.


இவர்களிலெல்லாம் இடிந்து விழும் நிலையிலுள்ள தங்களது வீடுகளை பராமரிக்கவோ மராமத்து பணிகளை செய்யவோ இயலாமல், வீடுகள் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இப்போது மழைக்காலம் என்பதால் இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டியது அவசியம்.

அண்மையில் பெய்த மழையின்போது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரபெருமாள் கோயில் என்ற கிராமத்தில் - அண்ணா நகரில் தமிழக அரசு கட்டிய தொகுப்பு வீட்டின் மேல் கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. எப்படியும் இடிந்து விழும் என்ற நம்பிக்கையில் அண்டை வீட்டில் படுத்திருத்த அக்குடும்பத்தினர் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
(மேற்கூரை இடிந்து விழுந்துள்ள நிலையை கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள படத்தை பாருங்கள்)

அதற்கு முன்பு பெய்த மழையின்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் பகுதியில் ஒரு தலித்தின் அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் அங்கு இரவில் படித்துக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் மாண்டுபோனார்கள். வேதாரண்யம் அடுத்த உப்பளாஞ்சேரி கிராமத்தில் பன்னீர்ச்செல்வம் என்ற தலித்தின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் காயமடைந்தார்கள். நல்லுதேவன் பட்டியில் உள்ள பழனி என்பவரின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பழனியின் குழந்தையும், மனைவியும் இறந்தனர்.


மொடக்குறிச்சி அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் காயத்துடன் சிறுமி உயிர் தப்பினாள்.

செங்குளம் காலனி அரசு குடியிருப்பு பால்கனி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பலியானார். இங்கு குறிப்பிட்ட நிகழ்வுகள் கொஞ்சம்தான். இவ்வாறாக, தமிழ்நாடு முழுவதும் அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மழை பெய்யும் போதெல்லாம் இடிந்து விழுகின்றன.

இதுதான் தலித்துகளுக்கு அரசு செய்துள்ள திட்டத்தின் நிலை. தலித்துகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியை தமிழக ஆளும் வர்க்கம் முறையாக செலவழிக்காததே இந்த நிலைக்கு காரணம்.

ஆதிதிராவிடர் நலத்திற்கென உருவாக்கப்பட்ட துறை தலித்துகளின் வாழ்வு மேம்பாட்டிற்கு உதவியதாக தெரியவில்லை. ஒரு சாதாரண தலித், ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கிய நிதியின் மூலமாக முதலாளியாக மாறினார் என்பதை யாராவது கண்டதுண்டா? இருக்கவே வாய்ப்பில்லை. காரணம், ஆடு, மாடு வாங்குதல் அல்லது மண்வெட்டி, கடப்பாரை வாங்குதல் செருப்பு தைக்க கடை வைத்தல் - இப்படிபட்ட நிலையில்தான் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதைவைத்து யாராவது முதலாளியாக உருவாக முடியுமா?

தலித்துகள் முதலாளிகளாக மாறுவதற்காக உருவாக்கப்பட்ட பெட்ரோல் நிலையம், பேருந்து வழித்தட உரிமம் போன்ற திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அவை தலித்துகளின் பெயரால் வேற்று சாதியினருக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கும் அதிகாரிகள் இருக்கும் வரை சாதாரண தலித் வளர முடியாது. இதுதான் உண்மை. அது போலத்தான், அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பராமரிப்பதற்கென தலித்துகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக ஆதிதிராவிடர் நலத்துறை கணக்குகள் எழுதியுள்ளன. ஆனால், அந்தத் தொகை தலித் மக்களுக்கு சென்றடையவே இல்லை.

இதைவிட மோசமாக அணுகுமுறையை தி.மு.க. அரசு தொடங்கி செய்து வருகிறது. அதுதான் சமத்துவபுரம் திட்டம். தலித்துகளின் பெயரால் பெரும் திட்டங்களுக்கான நிதியை எடுத்து வேற்று சாதியினருக்கு வழங்குவது போலவே, தலித்துகளின் பணம் சமத்துவபுரம் என்ற பெயரால் வேறுசாதியினருக்காக - ஆளுங்கட்சியினருக்காக செலவிடப்படுகின்றது.


அண்மையில், சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேசும் போது, ’’முந்தைய தி.மு.க ஆட்சியின்போது முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 145 இடங்களில் சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டது. பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததன் நினைவாக மேலும் 95 சமத்துவபுரங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2008-09 தமிழ்நாட்டில் 29 சமத்துவபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இங்கு திறக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தோடு சேர்த்து இதுவரை 9 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் மீதமுள்ள 20 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு விடும். 2009-10-இல் மேலும் 30 சமத்துவபுரங்களும், 2011-ஆம் ஆண்டு மீதம் உள்ள 36 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு மொத்தம் 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்பட்டு திறக்கப்படும்’’ என்றார்.


கலைஞரின் முற்போக்கு கனவு திட்டம் என்றும், சமுதாயத்தை மாற்றுவதற்கான திட்டம் என்று தி.மு.க. அரசு மார்தட்டி வரும் இந்தத் திட்டமே ஒரு மோசடியான திட்டம். பட்டினியால் வாடுகிறவனுக்கு உணவு கொடுக்க வேண்டிய நிதியை வைத்து கோயிலில் அன்னதானம் வழங்கிய ஜெயலலிதாவின் திட்டம் போல, தலித் மக்களுக்கு வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய பணத்தில் இந்த 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்படுகின்றன.


தலித்துகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் தாட்கோ மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் வீடு கட்டித்தர வேண்டும். வேறு எந்தத் திட்டத்துக்கும் இந் நிதியை பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, சமத்துவபுரங்களுக்கு தமிழக அரசு நிதியை வீணாக செலவழித்து வருகிறது. பெரியாரின் பெயரால் வாழ்வின் உச்சத்தை தொட்ட கருணாநிதி சமத்துவபுரம் அமைக்க முடிவெடுத்தபோது, இதற்கான நிதியை தமிழக அரசே தமது நிதியில் இருந்து ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், தலித் மக்களுக்கான நிதி தவறான வழியில் செலவிடப்படுகிறது.

இந்த இடத்தில் சிலர் யோசிக்கலாம். வீடு, மானியக் கடன்கள் ஆகியவை அரசாங்கமா பார்த்து கொடுக்கிற இலவசங்கள் தானே... எவ்வளவு கொடுத்தால்தான் என்ன? என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. இப்படி எண்ணுபவர்கள்தான் படித்துவிட்டு அலுவலராக வரும்போது, அந்த மனநிலையோடே செயல்படுகிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக தலித் மக்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்த, வாழ்கிற இந்த ஆதிக்க சமூகம், தலித்துகளின் வாழ்நிலையை மாற்ற கடமைப்பட்டுள்ளது.

தலித்துகளுக்கு அரசாங்கம் செய்வது சலுகையோ, இலவசங்களோ அல்ல; அவை தலித்துகளின் உரிமைகள் என்பதை வரலாற்று நிகழ்வுகளை தெரிந்துகொண்டு,
திறந்த மனதோடு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதிக்கச் சாதிகளில் பிறந்தவர்கள் அதனை ஒப்புக்கொள்வதன் மூலமாகவே தலித்துகளின் உரிமைகள் முறையாக அவர்களை சென்றடையும்.

இந்த சமத்துவபுரம் என்ற மோசடி திட்டம் பற்றி செ.கு.தமிழரசன் மட்டுமே கண்டித்திருக்கிறார். தலித்துகளின் ஏகபோக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்கிற வேறு எந்த தலித் தலைவர்களும் இது குறித்து வாய் திறக்கவேயில்லை. வெறும் ஒன்று, இரண்டு சீட்டுகளுக்காக தமது மக்களின் அடிப்படை உரிமைகளைகூட விட்டுத் தர தலித் தலைவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.


புனிதமான இடங்கள் என்று சொல்லப்படுகிற கோயில்களை கட்டுவதற்கு பல ஏழைமக்கள் மாண்டுபோனார்கள். அவர்களின் பிணங்களின் மீதுதான் நாம் வியக்கும் கோயிகளும் அரண்மனைகளும் கட்டப்பட்டன. அந்த கெடுகெட்டத்தனத்தை அரசன் செய்தான் என்பதாலேயே யாரும் தட்டிக் கேட்டு புரியவைக்கவில்லை. அது போலவே, தலித் தலைவர்களும், சமநீதி சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த மாதிரியான மோசடிகளை செய்யும் ஆளும் வர்க்கத்தையும், அதிகாரிகளையும் தட்டிக் கேட்காமல் இருக்கும் வரை - தலித்துகளின் சமாதிகளின் மீது சமத்துவபுரங்களை தமிழக அரசு கட்டிக்கொண்டுதான் இருக்கும். இந்த நிலையை மாற்ற சமூக ஆர்வலர்கள் பெரும் விவாதத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
முருக சிவகுமார் (murugasivakumar)

இல்லாத ஒரு பொருளை இறைவனென்று சொல்லுவார்;

இருக்கின்ற மானிடரை இழிவு என்று சொல்லுவார்


- இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர் பாடியது. இப்போதும் இந்தப் பாடல் வரிகளை சொல்லுமளவுக்கு சமூகம் இருக்கிறது என்பது அருவெறுப்பானது மட்டுமல்ல, வேதனையானதும்கூட.

கடவுளை நம்புகிறவர்களின் பேச்சில் ஒருவித வெறித்தனம் இருக்கும். இந்த வெறித்தனம்தான் பல தகராறுகளுக்கெல்லாம் மூலக்காரணம்.


கட்ந்த வாரத்தில் செய்தித்தாளை பார்த்தபோது, ஒரு நிழற்படம் கண்களை உறுத்தியது. மனதுக்கு நெருடலை தந்த அந்தப் படம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள செட்டிப்புலம் கிராமத்தில் தலித்மக்கள் ஒரு கோயிலுக்குள் நுழைந்து வழிபட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்டது.

இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அதன் பெயரால் நடந்துவரும் அநியாயங்கள் ஏராளம். கடவுள் என்று சொல்லி கல்லை நேசிக்கும் பலர் மனிதர்களை நேசிப்பதில்லை. அதனால்தான் மனிதநேயமற்ற கொடுமைகள் நடந்து வருகின்றன. செட்டிப்புலம் கிராமத்தில் என்ன நடந்தது? யாரால் நடந்தது? இத்தகைய சம்பவங்களுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? என்பது குறித்து விவாதிக்கலாமென்று தோன்றியது.


செட்டிப்புலம் கிராமத்தில் வன்னியர்கள் 300 குடும்பங்களும், தலித்துகள் 115 குடும்பங்களும் வசிக்கின்றன. வன்னியர்களில் பெரும்பான்மையோர் தென்னந்தோப்புகளுடன்கூடிய நிலம் வைத்துள்ளனர். அவர்களின் நிலங்களில் தலித்துகள் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இங்கு கடைத்தெருவிலுள்ள சலூன் கடையில் தலித்துகளுக்கு முடிவெட்டுவதோ, முடி மழிப்பு செய்வதோ மறுக்கப்பட்டு வருகிறது. ஆதிக்க மனோபாவத்தை பார்த்து பழகிப் போன தலித்துகள் பக்கத்து ஊருக்கு சென்று முடிவெட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


இப்படிப்பட்ட செட்டிப்புலம் கிராமத்தில் ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைய ஆதிக்கச் சாதி இந்துக்களான வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்டோபர் 14-ஆம் தேதி, சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் தலித்துகள் ஆலய பிரவேசம் செய்ய முயன்றனர். அதனை அறிந்த வன்னியர்கள் திரண்டு நின்று அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, ஆதிக்கச் சாதி கருத்தியலை விட்டுத் தர தயாராக இல்லாத வன்னியர்கள், காவல்துறை ஊர்தி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் காவல்துறையினர் காயமடைந்ததால் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியதால் அன்று மாலை 3 மணிக்கு பிறகு வெறும் முன்னூறு குடும்பங்களில் வாழும் வன்னியர்களை அடக்க ஏராளமான அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டார்.


இந்நிலையில், கோயில் நுழைவு பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், அன்று 10 ஆயிரம் தலித்துகளுடன் ஆலயப் பிரவேசம் செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.


இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை (வன்னியர்) முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடந்தது. இதில், தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.


இத்தீர்மானத்தை செயல்படுத்த, அன்று இரவே கோயிலில் ஆயுதப்படை பிரிவு காவலர்கள் குவிக்கப்பட்டனர். கோட்டாசியர். இராஜேந்திரன்(ஆதிதிராவிடர்), வேதாரண்யம் வட்டாட்சியர் கருணாகரன்(ஆதிதிராவிடர்) ஆகியோர் வீடு, வீடாக சென்று தலித் மக்களை 4 வேன்களில் ஏற்றி அழைத்து கொண்டு சென்றனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் முனியநாதன்(ஆதிதிராவிடர்), மாவட்ட வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை(வன்னியர்) ஆகியோர் கோயிலில் காத்திருந்தனர். பின்னர், வேன்களில் கொண்டு வரப்பட்ட தலித் ஆண்களும், பெண்களுமாக 70 பேர், மாவட்ட ஆட்சியர் முனியநாதன் தலைமையில் 11.45 மணிக்கு கோயிலுக்குள் சென்றனர்.


சிறப்பு பூஜைக்கு பிறகு தலித் மக்களுக்கு சுண்டல், சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. (இப்படிப்பட்ட சடங்கு நாடகத்தை நடத்திய ஆட்சியாளர்கள் அல்வா கொடுத்திருக்கலாம்)


செட்டிப்புலம் கோயிலுக்குள் தலித் மக்களை அழைத்து சென்ற நிகழ்வின் நிழற்படத்தை பத்திரிகைகளில் பார்த்தபோது, (மேலே இருக்கும் படத்தை நீங்களும் பாருங்கள்) பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா என்று மனம் குமுறியது. மதத்தையும், சாதியையும் நிலைநிறுத்தி பிரச்சனைகளை உருவாக்கும் கடவுள் என்னும் கற்பிதம் தேவையா? என்று காலங்காலமாக முற்போக்குவாதிகள் கூறிவருகின்றனர். ஆயினும் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையோர் இன்னும் திருந்தியபாடில்லை. அதேசமயத்தில், இந்த கோயில் நுழைவு போராட்டம் தேவையா? என்று சிலருக்கு கேள்வியெழலாம். சாதியின் அடிப்படையில் விளைந்த அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அனைத்து இடங்களிலும் புழங்க உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவது மிக அவசியம். ஆகவே, இதைப் பற்றி விவாதிப்பது நம் கடமை என்று தோன்றியது.


இல்லாத ஒரு பொருளை இறைவனென்று வழிபடும் பகுத்தறிவற்றவர்கள். தன்னைப் போலவே உடலும் சதையுமாக இருக்கிற சக மனிதனை சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தி வருகிறார்கள். கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடும். இது கடவுளின் கட்டளை’’ என்று சொல்லி இந்தச் சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களை பொது விசேசங்களில் கலந்துகொள்ள விடாமல் ஒதுக்கிவைக்கிற வக்கிர புத்தியுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லோரும் கடவுளை வழிபடுகிற காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்கள்.


இத்தகைய கேடுகெட்டத்தனத்தோடு இந்த உலகம் இருக்கிறதென்றால், அதைப் பார்த்துக் கொண்டுகடவுள்’’ சும்மா கிடப்பது ஏன்? எல்லோருக்கும் நல்லது செய்து, கெட்டது செய்பவர்களை அழிப்பதுதான் கடவுளின் வேலையென்றால், ஆதிதிராவிடர் மக்களை கோயிலினுள் நுழையக்கூடாதென தடுக்கும் கெடுகெட்ட சாதிவெறியர்களை, அந்தக் கடவுள் அழிக்காதது ஏன்?


சக்தி - உலகை ஆள்பவன் - எல்லாம் தெரிந்தவன் என்று பொய்யுரைகளால் புகழப்படும் கடவுள்’’ இருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருக்குமானால், ஆதிதிராவிடர் மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் செட்டிப்புலம் ஆதிக்க சாதி இந்து வன்னியர்களின் முன் அந்தக் கடவுள் வந்து தட்டி கேட்டிருக்கலாமே? அது இருந்தால்தானே நியாயத்தை கேட்கும்!


காலம்காலமாக கடவுளின் பெய்ரால் ஒதுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட தலித்து மக்களை, அரிஜன்ஸ் - கடவுளின் பிள்ளைகள் என்று ஆதிக்கச் சாதி மனநோயாளி காந்தி குறிப்பிட்டார். அதன் வேறுபட்ட பாணியில், எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்லும் முட்டாள்கள் இந்த உலகத்தில் இப்போதும் நிறைந்திருக்கிறார்கள். தலித்துகளும் கடவுளின் பிள்ளைகள் என்றால், தமது பிள்ளைகளில் ஒரு பிரிவினரான வன்னியர்கள் இன்னொரு பிரிவினரான ஆதிதிராவிடர்களை வீட்டினுள் - கோயிலினுள் நுழைய விடாமல் தடுக்கும்போது, தந்தை கடவுள் இருந்தால் அது நேரில் வந்து, ஏண்டா எப்படி செய்யறீங்கன்னு கேட்டு திட்டி அடிக்க வேண்டாமா? அப்படி செய்யவில்லையெனில், அந்த ஆதிதிராவிட மக்கள் - கடவுளின் வப்பாட்டிக்கு பிறந்த பிள்ளைகளா? அவர்களுக்கு வீட்டினுள் நுழைய பங்கு உரிமை இல்லையா? இப்படி சாதி அடிப்படையில் உயர்வு - தாழ்வு - தீண்டாமை கற்பிக்கப்பட்ட இந்தச் சமூகத்தை மாற்ற முடியாத - கண்டுகொள்ளாத கடவுள் எங்கு இருக்கிறான்; எப்படி இருக்கிறான் என்பதை பக்தகோடிகள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?. இதையெல்லாம் செய்ய துப்பில்லாத கடவுள் இருப்பதாக நம்பி பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களே, உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா? உங்கள் உடல் கூசவில்லையா?


உலகத்தில் ஓரறிவு உயிர், ஈரறிவு உயிர், ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர் என உயிர்கள் பல வகைகளில் பிறந்து வாழ்கின்றன. அவற்றில், ஆறாவது அறிவு இருப்பதாலேயே பகுத்தறிந்து உண்மைநிலையை உணரும் பக்குவம் மனிதனுக்கு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அதை கடவுளென்று பிதற்றிக்கொண்டு, சமூகத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் கேடு கெட்ட முட்டாள்களின் கூட்டம், பகுத்தறிந்து பார்க்க மறுப்பது ஏன்? காரணம், பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்தால், பலரும் ஏமாற்றி பிழைக்க முடியாது.


மனிதன் சிந்திக்காத வகையில் அறிவை மழுங்கடிக்கும் முயற்சி பல மட்டங்களிலும் தொடர்கின்றன. தினமலர், குமுதம், தினகரன், சக்தி விகடன், கல்கி உள்ளிட்ட பல பத்திரிகைகள் பக்தி ஸ்பெசல் வெளியிடுகின்றன. அதேபோல், விஜய் தொலைக்காட்சி நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் சாமி விசயங்களை ஒளிபரப்பினால், புதியதாக வந்துள்ள ஜி தொலைக்காட்சி தனது பங்குக்கு நம்பினால் நம்புங்கள் (நம்பலனா சாமி கண்ண குத்திடுமா?) என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.


சன் தொலைக்காட்சிக் குழுமத்தையும் ஜெயா தொலைக்காட்சி குழுமத்தையும் சொல்லாவே தேவையில்லை. சோதிடம், கோயில் தரிசனம், அருளாசி, இராமாயணம், மகாபாரதம்... என பல நிகழ்ச்சிகளில் பிற்போக்குத்தனக்களை மக்களின் மூளைக்குள் திணிக்கின்றன. பெரியாரின் பாசறையில் இருந்து வந்த கருணாநிதி இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரிரு ஊடகங்களை தவிர மற்றவை அனைத்தும் பிற்போக்குத்தனத்தையே கற்பிக்கின்றன. இதையெல்லாம் மாற்றவேண்டிய பொறுப்புள்ள பெரியாரின் பிள்ளைகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக்கொண்டு சொத்துக்களை காப்பதற்காகவே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.


மக்களை நல்ல வழியில் செலுத்த வேண்டிய கடமையுள்ள தலைவர்கள், தனது தொண்டர்களுக்கு சாதிவெறியை தூண்டிவிடுவதை தொழிலாகவே கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கடந்து சிந்திக்கும் திறனுள்ள உயிரினமான மனிதர்கள், எண்ணங்களை அகல விரித்து அறிவுடன் சிந்தித்தால் உண்மை விளங்கும். பிரச்சனைகள் தீரும்.


பெரியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்தக் காலக்கட்டத்திலும் தமிழ் நாடெங்கும் செட்டிப்புலம் போன்ற கிராமங்கள் ஏராளமாக கிடக்கின்றன. ஆதிக்கச் சாதி இனங்களில் பிறந்த பெரியாரிஸ்ட்களும், கம்யூனிஸ்ட்களும் சாதி ஒழிப்பை தமது உறவுகளிடம் பேசாமல், தலித்துகளிடம் பேசி வருவதால்தான் இந்த நிலை தொடர்கிறது. இந்தப் போலியான மனப்பான்மையை பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்ட்களும் விட்டுவிட்டு, தம் சாதியை சேர்ந்தவர்களில் 10 பேரையாவது மாதந்தோறும் சாதியற்ற மனிதர்களாக உருவாக்க முயல வேண்டும். அதனை உறுதிமொழியாக ஏற்று செயல்பட முன்வரவில்லையெனில், முற்போக்கு அரிதாரம் பூசிக்கொண்டு, பிழைப்பு நடத்தும் தொழிலாகவே பெரியாரியத்தையும் பொதுவுடமை சித்தாந்ததையும் இவர்கள் காண்கிறார்கள் என்பதையே உங்கள் செயல்பாடுகளில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.


தமிழ்த் தேசிய அரசியல் பேசிவரும் தலைவர்கள் சாதிவெறியை தூண்டும்படியும் பேசி வருகிறார்கள். சாதிகளோடு பிரிந்து கிடக்கும் பல இனங்களை ஒரே தமிழ்த் தேசத்தில் எப்படி அடைக்க முடியும்? இத்தகைய தலைவர்கள் அனைவரும், சாதி ஒழிப்பே, சமூக விடுதலை என்ற சித்தாந்தத்தை ஆழமாக புரிந்துகொண்டு, தமது உறவுகளின் சாதிப்பற்று மனோபாவத்தை மாற்ற முன்வர வேண்டும். அதுதான் சமூகத்துக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.


தலித்துகளின் அடிப்படை உரிமை பிரச்சனைகளை அறிந்து களைய வேண்டிய பொறுப்புள்ள தலித் இயக்கங்கள் அம்பேத்கர் விருது’’ பெற்றுக்கொண்டும், தொகுதி பங்கீட்டில் ஓரிரு இடங்களை பெற்றுக்கொண்டும் மௌனித்து கிடப்பது வெட்கக்கேடானது.


முற்போக்கு - தமிழ்த்தேசிய - பொதுவுடமை அரசியல்வாதிகளுக்கும், கடவுள் இருப்பதாக சொல்லும் பக்தர்களுக்கும் கொஞ்சம்கூட வெட்கமில்லை.


தமிழக அரசியலில் இருந்து திராவிட அரசியல் மாயையை அகற்றுவதன் மூலமாகவே இப்போதுள்ள இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கான திட்டங்களை வகுக்க முடியும் என்ற கருத்தியலை மேலும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு வறட்டுத்தனமான தமிழ்த் தேசிய அரசியலையும், கம்யூனிச அரசியலையும் விவாதிக்க வேண்டும்.