Showing posts with label அரசு பள்ளி. Show all posts
Showing posts with label அரசு பள்ளி. Show all posts
முருக சிவகுமார் (murugasivakumar)
பணத்தை கொட்டி கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்!

வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது! என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல.

அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிருவாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார்.

அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தை போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார்.

அடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளை தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையை காரணமாக காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதை கூட வாங்கி தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..!
முருக சிவகுமார் (murugasivakumar)

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்தான் இப்போதைய பரபரப்பு. தேர்ச்சி கண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து கல்லூரிகளில் சேர தேடி அலைகிறார்கள். தோல்வி கண்டவர்கள் துவண்டுபோய் வேதனை அடைகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் "மகத்தான" பணியை ஆற்றும் கடமையுள்ள தமிழக அரசு மகிழவும் வேண்டாம்; வேதனைப்படவும் தேவையில்லை. மாறாக வெட்கப்பட வேண்டும்.


இது காட்டமான விமர்சனமாகக் கூட இருக்கலாம். வெளிப்படையான மனநிலையில் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே.


ஆக, முதல் மூன்று இடப் பட்டியலில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெறவில்லை. ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் குற்றவாளி? இந்த நிலைக்கு முதலில் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்களின் நிலைக்கு ஆசிரியர்களையும் அரசையும் குற்றம் சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினவலாம்.


என் நினைவில் பதிந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர், அவரின் மகனைத் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருந்தார். அவரிடம் பேசும்போது, 'அரசு பள்ளியில் பணியாற்றும் நீங்கள், உங்கள் மகனை அதே பள்ளியில் சேர்த்திருக்கலாமே' என்றேன். அதற்கு ஆசிரியர் சொன்ன விடை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'அரசு பள்ளிக்கூடத்தில் நண்பகல்வேளை உணவு உண்ணும் போது பன்றிகளும் மாணவர்களும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. அந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தால், நான் சரியாகப் படிக்காததற்கு என் அப்பாதான் காரணம் என்று எதிர்காலத்தில் அவன் சொல்வான், அப்பழியை நான் ஏற்க விரும்பவில்லை' என்றார்.


ஆசிரியர்கள் உட்படப் படித்தவர்களின் இந்த நிலைதான். இந்த நிலையை மாற்ற முயற்சிக்காது வெறுமனே பேசும் இந்த மாதிரி ஆட்களால்தான், 12-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் ஒரு இடத்தைக்கூட அரசு பள்ளி மாணவர்கள் பெறாததற்குக் காரணம்.


'மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெறவில்லையே' என்று ஆசிரியர்களிடம் கேட்டால், 'அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி, அதுங்க திருந்தாதுங்க, யாருக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்' என்று சொல்வார்கள். மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரும் பொறுப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்களைப்பற்றி நிலையான ஒரு எண்ணத்தை வைத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் மாற்றம் வராதவரை மாநில அளவில், மாவட்ட அளவிலான பட்டியலில் ஒரு மாணவரின் பெயர்கூட சேராது.

தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.. புதிதாக எதையும் படிக்காமல் எப்போதோ படித்த பாடத்தை மனப்பாடமாக வகுப்பறையில் ஒப்பித்துவிட்டு நேரத்தை கழிக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அக்கறையின்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் போக்கில் மாற்றம் வரவேண்டும்.


பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் ஏழைகள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். படிக்காமல் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் நம் வாழ்க்கை குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கல் அனைவரும் எண்ணுகின்றனர். படிக்காத வறியவர்களின் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படும்போதே ஏ, பி, சி, டி... சொல்லிக்கொண்டே சேர்வார்களா? இருக்கவே இருக்காது. எதுவும் தெரியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்பித்து வல்லவர்களாக மாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டுப் படிக்காத வறியவர்களின் பிள்ளை வளர்ந்த சூழல்தான் சரியில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாற்றுவது எப்படி நியாயமாக இருக்கும்.


தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதனை ஏற்று நடத்துகிறவர்களுக்கு எப்படியாவது பாடுபட்டு வெற்றியை அடைய வேண்டும் என்று உள்ள உறுதியுடன் வேலை செய்கின்றனர். அந்த இலக்கையும் அடைகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறும்போது, சென்ற கல்வியாண்டில் நான் கற்பிக்கும் பாடத்தில் நல்ல தேர்ச்சி காட்டினால் மட்டுமே, ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? அச்சமாக இருக்கிறது என்று சொன்னார்.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அச்சம் சிறிதும் கிடையாது. காரணம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் என்ன, தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன.. எப்படி இருந்தாலும், அரசு அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது.

பள்ளிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாடம் கற்பித்தாலும் சரி, கற்பிக்காமல் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ஊதியம் மட்டும் வாங்கிவிடலாம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெறலாம். தனியார் பள்ளி நிருவாகத்தின் கட்டளைக்கு அஞ்சி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தனியார் ஆசிரியர்களிடம் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். படித்ததற்கு ஊதியம் தருகிறார்கள்.. அந்தப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி நம் பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பதான போக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றிக்கொள்வார்கள்.


ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணம்.


அடுத்து அரசின் பொறுப்பு என்ன? தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு தொகை செலவிட்டும் ஒருவரைக்கூட மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. அரசு நிதி ஓதுக்கிச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் அரசு போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஒரு கல்வியாண்டின் பாதி ஆண்டுவரை மாணவர்களின் தரத்தை அரசு மதிப்பிட்டு, பெரும் வெற்றிக்கான இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்பதை அறிய வேண்டும். கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதற்கு மாணவர்கள் காரணம் என்றால் அதனைத் தீர்ப்பதற்குப் புதிய திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் காரணம் என்றால் அத்தகையை ஆசிரியர்களைக் களையெடுக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்தால் மாணவர்களின் கல்வி மேம்படும்.


இல்லையெனில் தனியாருடன் போட்டிப்போடமுடியாத நிலையில் அரசு பள்ளிகள் இருந்துகொண்டேதான் இருக்கும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் அரசு உதவித்தொகை பெறுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.


முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்திவரும் சமச்சீர்கல்வியைத் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் இல்லை என்ற நிலையை எண்ணித் தமிழக அரசு வெட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

முருக சிவகுமார் (murugasivakumar)
மிழக முதல்வர் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் மாபெரும் கல்வி புரட்சி ஒன்று நடந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். அங்குள்ள பள்ளியொன்றுக்குச் செல்வதற்கு வழிகேட்டு ஒரு அறையில் நுழைந்தேன். மாணவர்கள், கணினி முன் அமர்ந்து தலையணி குரல் வாங்கியை (ஹெட் போன்) மாட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தனர். ஏதோ அழைப்பு நடுவத்திற்கு வந்துவிட்டோமே என்று மன தயக்கத்துடன் அறையைவிட்டு வெளியில் செல்வதற்கு முற்பட்டேன். இது அழைப்பு நடுவம் அல்ல; அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளிதான் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழத்தியது.

தமிழக சிற்றூர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தை 12 ஆண்டுகள் படிக்கின்றனர். ஆனாலும் பெரும்பான்மையோருக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ, படிக்கவோ, புரிந்துகொள்ளவோ இயலுவதில்லை ஆங்கிலத்தில் இருக்கும் விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் 80 விழுக்காடு மாணவர்கள் துன்பப்படுகின்றனர்.

பொருளாதாரத்தில் வசதிபடைத்தவர்களின் பிள்ளைகள் அனைவரும் பதின்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சிறந்த முறையில் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுவதால், உயர்கல்வி பெறுவதிலும் வேலைவாய்ப்பு பெறுவதிலும் அவர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்களுடன் சிற்றூர்ப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டிபோட முடியாமல் வாழ்வில் பின்தங்கி விடுகின்றனர்.

இந்நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு முயல வேண்டும் என்று பலமுறை என்னை போன்றோர் எண்ணியதுண்டு. தமிழ் உணர்வுடன் தமிழை படிப்பதும் படிக்க சொல்வதும் முக்கியமானதுதான். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலம் தெரியாமல் எந்தத் துறையிலும் வெல்லமுடியாது என்பது உண்மை. கணினி உதவியுடன் ஆங்கிலப் பயிற்சி என்னும் புதிய திட்டத்தைக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தொடங்கியதைப் பார்க்கும்போது மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தமிழக முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்திட்டத்தைத் தொடக்கிவைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆங்கிலப் பயிற்சி பெறுவதற்கு ரூ.6 இலட்சம் மதிப்பில் கணினி, மென்பொருள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு படிநிலைகளில் உரையாடல் நிகழ்ச்சியாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், குறும்படங்களின் வழியாக உரையாடல் நுணுக்கங்களை அறிதல், விளையாட்டு நிகழ்ச்சிகளின் வழியாக வரி வடிவமைப்பை அறிதல், மென்பொருள் வழியாக இலக்கணம் மற்றும் சொற்களின் உச்சரிப்பை அறிதல் போன்ற முறைகளிலும் பயிற்சிகள் நடைபெறுகிறது. சுவாமி விவேகானந்தர், ஆப்ரகாம் லிங்கன் போன்ற முக்கிய ஆட்களின் ஆங்கில சொற்பொழிவுகள், உரைகள் ஆகியவற்றைக் கொண்டும் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் முக்கியக் கூறாகும். அனைத்து வகுப்புகளின் ஆங்கிலப் பாட புத்தகங்கள் குறுந்தகடுகளில் தமிழ் பொருளுடன் உள்ளன. இவை அனைத்தையும் கொண்டு மாணவர்களுக்கு முதுநிலை ஆங்கில ஆசிரியர் பயிற்சியளிக்கிறார்.

திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் சரவணனிடம் இத்திட்டம் குறித்துக் கேட்டபோது, கணினி ஆய்வகத்தின் மூலம் ஆங்கிலப் பயிற்சி பெறுவது மாணவர்களுக்கு உற்சாகமாக உள்ளது. வகுப்பறைகளில் மாணவர்களின் நடத்தையில் பெரும் மாற்றத்தை இப்பயிற்சி வகுப்புகள் உருவாக்கியுள்ளன. சிறு விளையாட்டு நிகழ்ச்சிகளின் மூலம் ஆங்கிலப் பயிற்சி அளிப்பது விரைவாக மாணவர்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது என்றார்.

இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் 11-ஆம் வகுப்பு மாணவர் கமலக்கண்ணன் கூறுகையில், கணினி உதவியுடனான ஆங்கிலப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆங்கிலப் பாடங்களைப் பொருளுடன் புரிந்துகொள்ள முடிகிறது. ஆங்கிலத்தில் பேசுவதில் எனக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன் தன்னம்பிக்கையின் அளவும் உயர்ந்துள்ளது என்றார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பயிற்சி பெறும் ஒரு மாணவரின் தந்தை கூறுகையில், என் மகன் திருக்குவளை மேல்நிலைப் பள்ளியில் 11 -ஆம் வகுப்புப் படித்து வருகிறான். வானொலி, தொலைக்காட்சிகளில் வரும் தமிழ்செய்திகளைப் பார்க்காத, கேட்காத அவன், இப்போது, நாள்தோறும் ஆங்கிலச் செய்திகளைக் கேட்டு புரிந்துகொள்கிறான். இது கணினி உதவியுடனான ஆங்கிலப் பயிற்சி திட்டத்தின் பயனாகும் என்கிறார்.

இந்த ஆங்கிலப் பயிற்சித் திட்டத்தை 30 பள்ளிகளில் விரைவில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடங்க உள்ளதாகவும் நாகை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா தெரிவிக்கிறார்.

கொம்புகள் சீவப்பட்ட நிலையில் களத்தில் நிற்கும் காளையுடன் முனை மழுங்கிய கொம்புடன் இருக்கும் காளை எப்படி போட்டிபோட முடியும். போட்டியிட்டாலும் தோல்வியே மிஞ்சும். ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியாத சிற்றூர்ப்புற மாணவர்கள், வேலைவாய்ப்புப் பெறுவதற்குப் பெரும் துன்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ முடிவதில்லை.

கணினி உதவியுடன் ஆங்கிலப்பயிற்சி அளிக்கும் இந்தப் புதிய முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தில் வசதி படைத்த மாணவர்களுடன் ஏழை மாணவர்களும் போட்டிபோட முடியும். இதுவே, என் போன்றோரின் எதிர்ப்பார்ப்பாகும். இத்திட்டத்தைத் தமிழக அரசு விரைவில் விரிவுபடுத்தும் என நம்புவோம் .