Showing posts with label சாதிவெறி. Show all posts
Showing posts with label சாதிவெறி. Show all posts
முருக சிவகுமார் (murugasivakumar)
அடித்தளத்தில் வாழ்கிறவ்ர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் குரல் இந்திய சமுதாயத்தில் செவிசாய்க்கப்படாது; வெற்றிபெறாது என்பது மகளிர் மசோதா மூலம் மீண்டுமொரு முறை நிரூபிக்கப்படவிருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக என்ன காரணத்துக்காக சமூகநீதி கொள்கையுடையவர்களால் எதிர்க்கப்பட்டதோ, அந்த எதிர்ப்புக்கு கிஞ்சித்தும் சுணங்காத அதிகாரச் சமூகம் அதே நிலையில் மகளிர் மசோதாவை செயல்படுத்தவிருப்பது வேதனையானது.

2009 ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ‘மகளிர் மசோதாவை இதே வடிவில் கொண்டுவந்தால் இதை எதிர்க்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எங்கள் கட்சிக்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த அவையிலேயே நான் விஷம் குடித்து இறப்பேன், மசோதாவை நிறைவேற்ற விடமாட்டேன்’ என்றார்.

இப்படியாக மகளிர் மசோதாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிறைவேற்றப்படாமலே இருந்தது. இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்து பின்னர் அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மகளிர் உரிமை நாளாக மார்ச் 8 அன்று இந்திய பெண்களுக்கான பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.இந்த சட்ட மசோதாவை மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்களால் நிருவகிக்கப்படுகிற காங்கிரசு, பாஜக, இடதுசாரிகள் கட்சிகள் ஆதரிக்கின்றன.

அதேசமயம், லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் கட்சிகள் எதிர்கின்றன. அவர்கள் எதிர்த்தாலும் மசோதா நிறைவேறப் போவது உறுதி. சிற்றூர்ப்புறங்களில் சொல்லப்படும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்ற சொலவடை உறுதியாகியிருப்பது வருந்தத்தக்கது.ஆனால், இந்த நிலை தொடருவது நல்லதல்ல என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

இந்நிலையில் மகளிர் மசோதவை தடுத்து நிறுத்துபவர்கள் அனைவரும் ஆணாதிக்கவாதிகள் - சமூகநலனுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை பெண்ணியவாதிகளும், மசோதாவை ஆதரிப்பவர்களும் பரப்பிவருகின்றனர்.

ஜூன் 16, 2009 அன்று 'ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கை அதிகரித்தல்' என்ற கருத்தரங்கை திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி துவக்கி வைத்து பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் சிலர் விஷம் குடிப்பேன் என்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அந்தளவுக்கு ஆணாதிக்கம் இருக்கிறது. அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு போக மீதியுள்ள இடங்களை பெண்களுக்கு தரலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அரசியல் ஆண்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. அதில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும்” என்று அரைவேக்காட்டுத்தனமாக சொல்லியிருக்கிறார்.

இப்படியான கருத்தை பரப்பியதும் பரப்பி வருவதும் கேடுகெட்ட அரசியல் வித்தை என்ற நிலையில் மகளிர் மசோதா குறித்தும், எதிர் - ஆதரவு கருத்து குறித்தும் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு அரசியல் தலைவரின் மகளாக பிறந்து, முதலமைச்சரின் குமரியாக வளர்ந்து, வசதியாக மாப்பிளைக்கு மனைவியாகி சுகபோக வாழ்க்கை நடத்திய பின்னர் திடீரென்று எம்.பியாக அவதாரமெடுத்து நாடாளும் மன்ற கட்டடத்தில் நுழைந்த அரசிளங்குமரி கனிமொழி சரத் யாதவை ஆணாதிக்கவாதி என்று திட்டியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாவம், அவர் வளர்ந்த சூழல் அப்படி. சரத் யாதவின் கருத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்ளும் திராணியற்றவர் கனிமொழி என்பதுதான் உண்மை.

இத்தருணத்தில் மகளிர் மசோதா பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசாமல் ஒரு கருத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மசோதாவை எதிர்ப்பவர்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்ற கேடுகெட்ட எண்ணத்தால் எதிர்க்கவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்துவிட்டு, அந்த மசோதாவை நிறைவேற்றுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் எண்ணமும், செயல்பாடும் தவறா? அதை தவறென்று நினைப்பவர்கள் அனைவரும் அடித்தளத்தில் வாழ்பவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஆதிக்கவாதிகள் என்று பழியை சுமக்க வேண்டியவர்கள். சமூகத்தை முழுவதுமாக அறியாத பலரும் மகளிர் மசோதா பற்றி பேசுவது வேதனையானது.

உள் இட ஒதுக்கீடு ஏன் தேவை?

சாதிகளாலும், பொருளாதார படிநிலையாலும் பிரிந்து கிடக்கிற இந்திய சமூகத்தில் வாழ்கிற பெண்கள் எல்லோரும் ஒரே நிலையில் வாழ்கிறார்களா? என்ற கேள்விக்கு இல்லைவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், எத்தனையோ இலட்சம் பெண்கள் இந்தியாவில் அரவமற்று வாழ்கை தேடிக்கொண்டே கிடக்கிறார்கள்.

சாதி, பணம், மதம், சடங்கு, ஆண் உள்ளிட்ட கருத்தியல்களின் கீழ் பெண்கள் மண்டியிட்டு கிடக்கும் அளவுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் எல்லா பெண்களையும், ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கலாமா? அப்படி பார்க்கும் பார்வை சரியானதா? என்றால், அது நிச்சயமாக சிறந்த பார்வையாக இருக்க முடியாது.

ஆதிக்கசாதிகளின் தெருவில்கூட தலித் நடக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஊர்களும், அன்றாடங்காய்ச்சி கூலி தலித்துகள் சாதிகளின் நெருக்குதல்களில் சிக்குண்டு மூச்சுதிணற முழிபிதுங்கி கிடக்கிற ஊர்களும் இந்தியாவில் ஏராளமாக காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நம் சமூகத்தில் வாழ்கிற பெண்களை (1) கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, அடித்தள பெண்கள்; (2) பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள்; (3)சாதியால் ஒடுக்கப்பட்ட இன பெண்கள் என்று மூன்று வகையாக பகுக்கலாம். உயர்குடியில் பிறந்த பெண்களுக்கு, இந்த சமூகத்தில் விரவிக்கிடக்கிற வாய்ப்பும் வசதிகளும் கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு கிடைத்ததில்லை. அந்த கிராமப்புற பிற்படுத்தப்பட்ட பெண்களை காட்டிலும், சாதியால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட தலித் பெண்களின் இருப்பு ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் வேதனையிலும் உறைந்து கிடக்கிறது.

தலித் பெண்கள்: ஓலைகுடிசையில் சாணித் தரையில் பிறந்து, செங்காட்டு மண்ணில் புரண்டு, ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு வந்து, ஒரு பண்ணையாரிடம் அடிமை ஆளாக இருக்கிற ஆணுக்கு வாக்கப்பட்டு, புள்ளக்குட்டிகளோடு, வானம்பார்த்த நிலத்தை மொட்ட களைவெட்டியால் கொத்திக்கொண்டும், மொன்ன அரிவாளால் அறுப்பு அறுத்துக் கொண்டும் அரை வயிறு கஞ்ச குடித்து வாழ்நாளை கழித்து மடிந்துபோகிறார்கள்.

தலித் அல்லாத பெண்கள்: ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை உறிஞ்சி காசுகளாகவும், நகைகளாகவும் குவித்துள்ள வீட்டில் பிறந்து கான்கிரீட் தரையிலும், தொட்டிலிலும் வளர்ந்து, பொம்மைகளோடு விளையாடி, பத்து ஊரை கடந்து சென்றாவது நல்ல பள்ளியில் படித்துவிட்டு, அப்பா - அண்ணண்கள் கடைக்கண் கருணையோடு பணம் படைத்தவனுக்கு வாக்கப்பட்டு, வேலையாட்களை மெய்க்கும் பொறுப்பை ஏற்று, பஞ்சு மெத்தையில் தூங்கி பாலும் சோறும் தின்று, உழைக்காமலே உடலை வளர்த்து, பணத்தால் இறப்பு நாளை தள்ளி போட்டு வாழ்கிறவர்கள்.

வசதிபடைத்த குடும்ப பெண்கள்: சுகத்தில் வளர்ந்து, பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக மட்டுமே பணம் கட்டியாவது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் உறங்கும் நேரம், தொலைக்காட்சி பார்க்கும் நேரம் போக, மீதி பொழுதை போக்க உதட்டு சாயத்துடன் மகளிர் மன்றங்களிலும், கட்சிகளிலும் வலம் வந்து வாழ்கிறவர்கள்.

இம்மூன்று தரப்பினரையும் ஒருசேர பார்ப்பவர்கள் மனநோயாளிகளாகதான் இருப்பார்கள்.

ஆதிக்கசாதி குடியில் பிறந்த பெண்களுக்கு அவர்களின் அப்பா, அண்ணன்கள் உறுதுணையாக இருந்து பலரது உழைப்பை சுரண்டியாவது வாழ்நாள் முழுவதும் வசதியாகவே வாழ வகை செய்வார்கள். ஆனால், உழைத்தும் அதற்கேற்ப கூலி வழங்கப்படாத இந்த சாதிய - முதலாளிய சமுதாயத்தில் அடிமைகளாக வாழ்க்கை நடத்துகிற அப்பா, அண்ணண்கள் இருக்கும்போதும், தான் வாழ்வதற்கான வகையை தானே தேடி நிலக்கிழார்களின் கொல்லைகளில் வயிறுகூட நிரப்ப போதாத கூலிக்கு வாழ்நாளை ஒப்புகொடுத்துவிட்டு, பிள்ளை, குட்டிகளோடும், உறவுகளோடும் இழுபடுகிற தலித் பெண்களுக்கு யாரும் துணை வருவதில்லை.

”ஊர் குருவி ஒசர பறந்தாலும், பருந்தாகாது” என்று சாதியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட மொழியை போல, இத்தடைகளையெல்லாம் மீறி அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் பயனால் வாழ்வின் பற்றுக்கோடென படிப்பை எண்ணி படித்துவிட்டு வெளியே வரும் தலித் பெண்கள், வேலை செய்கிற இடங்களில் சாதிய மனநோயாளிகளிடம் சிக்குண்டு மன உளைச்சலில் கிடக்கிறார்கள். வேலை செய்கிற இடங்களில் தலித் பெண்களை உளைச்சலில் ஆழ்த்துகிற ஆதிக்கசாதி ஆண்களுக்கு சளைக்காதவர்களாக ஆதிக்கச்சாதி பெண்களும் இருந்து வருகின்றனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

ஆதிக்கசாதி இனத்திலும், பொருளாதார வசதிபடைத்த இனத்திலும் பிறந்த பெண்களுக்கு ஆணாதிக்க சமுதாயத்தில் பல கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அதை எதிர்கிற முற்போக்காளர்களில் பலர் அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களை, ஆதிக்க சாதி பெண்கள் நடத்துகிற விதத்தை கண்டிப்பதே இல்லை.

இந்நிலையில், ஒரு தலித் பெண்ணையும், ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணையும், ஒரு மேட்டுக்குடி பெண்ணையும் ஒரு தளத்தில் வைத்து பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனத்தை பணம் படைத்தவர்களும், மேட்டுக்குடிகளும் நிரம்பிக்கிடக்கிற நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றவிருக்கிறார்கள்.

கருணாநிதியின் கருத்து

இதனை எதிர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிற முதலமைச்சர் கருணாநிதி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ அதைதான் பொதுக்கருத்தென ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி, “மகளிர் மசோதா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பெரும்பாமையோரின் கருத்தை பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ள சொல்கிற கருணாநிதியின் கருத்து பெரும் ஆபத்தானது. இதே நிலைப்பாட்டை சாதியிலும், ஆன்மீகத்திலும் பொருத்தி பார்த்து பெரும்பான்மையோரின் கருத்தை பொதுக்கருத்தை ஏற்றுக்கொள்ளலாமா? என்பதையும் அவர் விளக்கினால் குழப்பம் விலகும். பதவியையும் சொத்துக்களையும் நிலைநிறுத்திகொள்ள எதை வேண்டுமானாலும் பேசும் நிலைக்கு திராவிட தலைவர் கலைஞர் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

மகளிருக்கு இடங்களை ஒதுக்குவதற்காக மசோதாவைக் கொண்டு வருகிறபோது, அந்த இடங்களை யாரெல்லாம் கைப்பற்றுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும், உதட்டுசாயம் பூசிக் கொண்டு கிளப்புகளில் வலம் வருகிற மேட்டுக்குடி பெண்களுக்கும், வசதியான குடும்ப பெண்களுக்கும் 33% இட ஒதுக்கீடு பயன்பட போகிறது. இவர்களை கடந்து, கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களோ, அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கேற்கவே முடியாது என்பதுதான் உண்மை.

இந்த நிலை ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் தலித் பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் தனித் தனி உள் இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடித்தள பெண்கள் மீது மேட்டுக்குடி சமூகம் கட்டவிழ்த்துவிடும் வன்முறையின் வடிவமாக மகளிர் மசோதாவை பார்க்கலாம்.

எதிர்காலத்திலாவது அடித்தளத்தில் வாழ்கிற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகார வர்க்கத்தினர் முன்வரும் வரை இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது தேவையாகிறது.
முருக சிவகுமார் (murugasivakumar)
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கட்காரி பிராமணர் சாதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதே போல, வியாழன்று மக்களவை எதிர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து எல்.கே.அத்வானியை விலக வைத்து, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் தேர்வு செய்யப்பட்டிருகிறார். அவரும் பிராமணர் சாதியை சேர்ந்தவர்.

இது வரையில் பாரதிய ஜனதா கட்சின் தேசிய தலைவராக இருந்த இராஜ்நாத் சிங் வயது 76. எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்த எல்.கே.அத்வானிக்கு வயது 83 என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சிக்கு புதிய இரத்தம் செலுத்தப்பட வேண்டும். அதுவும் இளம் இரத்தம் செலுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவிக்கு கட்காரியும், எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சுஷ்மா சுவராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிப்படையாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம், பதவி விலகியிருக்கும் இராஜ்நாத் சிங்கும் அத்வானியும் பிராமணர் அல்லாதவர்கள். புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்காரியும், சுஷ்மாவும் பிராமணர்கள்.

பா.ஜ.க.வை பொறுத்த வரையில் அது முன்னேறிய வகுப்பினரின் கட்சி என்றும், குறிப்பாக, பிராமணத் தலைவர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சி என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், பிராமணர் அல்லாத இராஜ்நாத் சிங்கும் அத்வானியும் முக்கிய தலைமை பதவியில் இருப்பதை பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. இளம் தலைவர்கள் கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை மீண்டும் பா.ஜ.க.வை பிராமணத் தலைவர்களின் ஆதிக்கத்தில் கொண்டுவர திரைமறைவில் திட்டமிட்டு, அதை சாதித்து கொண்டுள்ளது.

பா.ஜ.க. தலைவராக இருக்கும் நிதின் கட்காரி மராட்டியத்தை சேர்ந்த பிராமணர். அம்மாநில பா.ஜ.க. தலைவராக இருந்து வந்தார். முன்பு இம்மாநிலத்தில் இருந்த பா.ஜ.க. சிவசேனை கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

சுஷ்மா சுவராஜ் முன்பு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி நடுவண் ஆட்சியில் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்தவர்.

அண்மையில் கருநாடக மாநிலத்தில் குவாரி ஊழல் பண முதலைகளான அமைச்சர்கள் கருணாகரன், ஜனார்த்தனன் ஆகியோர் செய்த ஊழலை தட்டி கேட்டதாலே எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்க அவர்கள் முடிவெடுத்து, பணத்தால் சதித் திட்டம் தீட்டினர். அப்போது, சமாதானம் செய்வதாக கூறி எடியூரப்பாவை ஊழல் முதலைகளுக்கு பணியவைத்த பெருமை சுஷ்மா சுவராஜுக்கே உரியது. காரணம், அந்த பணமுதலைகளோடு சேர்ந்து சுஷ்மா என்ற முதலையும் பணத்தை பெருக்கிவருவதாக கூறப்படுகிறது.

அத்வானியின் பிறந்த நாளில் சமாதானம் நாடகத்தை நடத்தி தன்னை வலிமையானவராக காட்டிக் கொண்ட சுஷ்மா இப்போது, அத்வானியை தள்ளிவிட்டு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். இதுவெல்லாம் அந்த சாதிக்கு புதிதல்லதானே?

பிற்போக்குவாத முட்டாள்களின் அமைப்புக்கு எந்த முட்டாள் தலைமை பதவிக்கு வந்தால் என்ன?

இதில் உச்சகட்ட நகைச்சுவை என்ன தெரியுமா? பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்ற கட்காரி பேசுகையில், தலித்துகளுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுவேன் என்று கூறினார். ஆடுகளை ஓநாய் பாதுகாப்பதாக சொல்வதை யாராவது நம்புவார்களா? அப்படி நம்பினால், டாக்டர் அம்பேத்கர் சொல்லில் சொல்வதானால், அவர்களெல்லாம் பலியாடுகள்!
முருக சிவகுமார் (murugasivakumar)
இந்தியாவில் தலித்து மக்கள் அனைத்து நிலைகளிலும் வஞ்சிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, அவர்களுக்கு ஆதிக்கச் சாதிகள் செய்யும் கொடுமைகளை விட அரசாங்கம் செய்து வரும் வன்கொடுமைகளை அதிகம். காரணம், இந்த ஆட்சியும், அதிகார மையங்களும் சாதிவாதிகளால்தான் ஆளப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக இருப்பது உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றில் உணவு இல்லாமல் பட்டினியோடு காலத்தை கழிக்க முடியும். அது நம் நாட்டில் இயல்பானதுதான். இந்தியாவின் மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் வயிறார சாப்பிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் இராப்பட்டினியாகவே உறங்கச் செல்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அடுத்து, உடை - பழைய கந்தல் துணியையாவது துவைத்து துவைத்து கட்டிக் கொள்ளலாம். வறுமையின் உச்சத்தை வெளிச்சம்போட்டு வெளிப்படுத்துவதாக அரை நிர்வாணத்தோடு அலையும் மனிதர்கள் நம் சமுதாயத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.


அடுத்து, மூன்றாவதாக இருப்பிடம். உணவு, உடை இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் என்ற நிலையிலும் படுத்துறங்க இருப்பிடம் ஒன்று இல்லையெனில் வாழ்க்கை நரகமாகவே மாறிவிடும்.

பெரிய மாளிகை போன்ற வீடுகளை கட்டி வைத்துவிட்டு குடியிருக்காமல், கட்டி சாத்திவிட்டு கிடக்கும் வீடுகளை சென்னை உள்ளிட்ட நகரங்களில் காணலாம். அல்லது, இரண்டு மூன்று பேருக்கு 10 அறைகளுக்கு மேல் 4 மாடிகள் கட்டி ஆட்கள் நடமாட்டமின்றி பல அறைகள் கிடக்கின்றன. இவ்வாறாக, ஆறு மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகள் - ஆட்கள் வசிக்காத வீடுகளை கைப்பற்றி வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்க தனி சட்டம் கொண்டு வந்தால் நல்லாதான் இருக்கும். ஏனெனில், சிலர் வணிகம், அரசியல் போன்ற தொழில்களை செய்து, மக்களை ஏமாற்றி அளவுக்கு மீறி சொத்துக்களை அமுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில், படுத்துறங்க வீடு என்று சொல்லுபடியான ஒரு இடம் இல்லாததால் பல குடும்பங்கள், சாலையோரங்களில் பிள்ளை குட்டிகளுடன் காலத்தை கழித்தபடி கிடக்கின்றன.

கிராமப் புறங்களில் பார்த்தோமானால், வயல்களில் எளிதாக கிடைக்கிற கரும்பு தோகையையும், தென்னங்கீற்றுகளையும் நிலக்கிழார்களிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி கொண்டு வந்து கூரையாக வேய்து, மண்ணை பிசைந்து கற்களை வைத்து குடிசைகளை அமைத்து வாழும் மக்களை காணலாம். அந்தக் குடிசைகளில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கூரை பொத்தலாகி போய் இரவுகளில் முற்றத்தில் நிலா எட்டிப் பார்த்தபடி இருக்கும். மழை பெய்யும் காலங்களில் ஒரு ஓரத்தில் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு, சொம்பு, தட்டு, ஈய ஏனம் ஆகியவற்றை வைத்து மழைநீரை பிடித்தபடி இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் எண்ணற்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இத்தகைய கொடுமைகளையெல்லாம், காலம் காலமாக உழைத்து தம் உழைப்பின் வழியாக பலரின் வாழ்வை சுகமாக்கிய தலித் மக்களே பெரும்பாலும் அனுபவித்து வருகிறார்கள்.


இந்த நிலையை போக்கி அனைத்து மக்களுக்குமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளும் அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்புடன்தான் தலித் மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்கென மத்திய அரசு அன்னை இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தை உருவாக்கியது. அதன் மூலம் 1980-க்கு பிறகு தலித் மக்களுக்கு 4 பேர் படுக்கும் அளவுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவழிக்காத சூழலில், தலித்துகளுக்கு வீடுகளை கட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் முறையாக செலவிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான பல ஆயிரம் ரூபாயில் ஆளுங்கட்சியினரும், அலுவலர்களும் பெரும் தொகையை தமது பங்காக எடுத்து கொண்டு, குறைந்த தொகையில் வீடுகள் கட்டித் தருகிறார்கள்.

அவ்வாறு கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள் பலவும் அடுத்த மழைக்கே தாங்காமல் ஒழுகும் அவல நிலையில் இருந்தன. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தலித் கான்கிரீட் வீடுகள் இப்போது பல இடங்களிலும் மேற்கூரை இடிந்துவிழுகின்றன.


காலம் முழுவதும் ஓய்வின்றி உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் தலித் மக்களுக்கு வழங்கப்படாத இந்தச் சமுதாயத்தில், பெரும்பாலான தலித்துகள் அன்றாடம் காய்ச்சிகளாகவே வாழ்கிறார்கள் அல்லது வாழ்வின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் முதலாளிகளிடம் கடனாக சில நூறுகளை வாங்கிவிட்டு, அதற்கு பல ஆயிரங்களை வட்டியாக கட்டிக்கொண்டு கடனாளிகளாகவே கிடக்கிறார்கள்.


இவர்களிலெல்லாம் இடிந்து விழும் நிலையிலுள்ள தங்களது வீடுகளை பராமரிக்கவோ மராமத்து பணிகளை செய்யவோ இயலாமல், வீடுகள் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இப்போது மழைக்காலம் என்பதால் இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டியது அவசியம்.

அண்மையில் பெய்த மழையின்போது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரபெருமாள் கோயில் என்ற கிராமத்தில் - அண்ணா நகரில் தமிழக அரசு கட்டிய தொகுப்பு வீட்டின் மேல் கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. எப்படியும் இடிந்து விழும் என்ற நம்பிக்கையில் அண்டை வீட்டில் படுத்திருத்த அக்குடும்பத்தினர் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
(மேற்கூரை இடிந்து விழுந்துள்ள நிலையை கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள படத்தை பாருங்கள்)

அதற்கு முன்பு பெய்த மழையின்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் பகுதியில் ஒரு தலித்தின் அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் அங்கு இரவில் படித்துக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் மாண்டுபோனார்கள். வேதாரண்யம் அடுத்த உப்பளாஞ்சேரி கிராமத்தில் பன்னீர்ச்செல்வம் என்ற தலித்தின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் காயமடைந்தார்கள். நல்லுதேவன் பட்டியில் உள்ள பழனி என்பவரின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பழனியின் குழந்தையும், மனைவியும் இறந்தனர்.


மொடக்குறிச்சி அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் காயத்துடன் சிறுமி உயிர் தப்பினாள்.

செங்குளம் காலனி அரசு குடியிருப்பு பால்கனி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பலியானார். இங்கு குறிப்பிட்ட நிகழ்வுகள் கொஞ்சம்தான். இவ்வாறாக, தமிழ்நாடு முழுவதும் அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மழை பெய்யும் போதெல்லாம் இடிந்து விழுகின்றன.

இதுதான் தலித்துகளுக்கு அரசு செய்துள்ள திட்டத்தின் நிலை. தலித்துகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியை தமிழக ஆளும் வர்க்கம் முறையாக செலவழிக்காததே இந்த நிலைக்கு காரணம்.

ஆதிதிராவிடர் நலத்திற்கென உருவாக்கப்பட்ட துறை தலித்துகளின் வாழ்வு மேம்பாட்டிற்கு உதவியதாக தெரியவில்லை. ஒரு சாதாரண தலித், ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கிய நிதியின் மூலமாக முதலாளியாக மாறினார் என்பதை யாராவது கண்டதுண்டா? இருக்கவே வாய்ப்பில்லை. காரணம், ஆடு, மாடு வாங்குதல் அல்லது மண்வெட்டி, கடப்பாரை வாங்குதல் செருப்பு தைக்க கடை வைத்தல் - இப்படிபட்ட நிலையில்தான் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதைவைத்து யாராவது முதலாளியாக உருவாக முடியுமா?

தலித்துகள் முதலாளிகளாக மாறுவதற்காக உருவாக்கப்பட்ட பெட்ரோல் நிலையம், பேருந்து வழித்தட உரிமம் போன்ற திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அவை தலித்துகளின் பெயரால் வேற்று சாதியினருக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கும் அதிகாரிகள் இருக்கும் வரை சாதாரண தலித் வளர முடியாது. இதுதான் உண்மை. அது போலத்தான், அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பராமரிப்பதற்கென தலித்துகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக ஆதிதிராவிடர் நலத்துறை கணக்குகள் எழுதியுள்ளன. ஆனால், அந்தத் தொகை தலித் மக்களுக்கு சென்றடையவே இல்லை.

இதைவிட மோசமாக அணுகுமுறையை தி.மு.க. அரசு தொடங்கி செய்து வருகிறது. அதுதான் சமத்துவபுரம் திட்டம். தலித்துகளின் பெயரால் பெரும் திட்டங்களுக்கான நிதியை எடுத்து வேற்று சாதியினருக்கு வழங்குவது போலவே, தலித்துகளின் பணம் சமத்துவபுரம் என்ற பெயரால் வேறுசாதியினருக்காக - ஆளுங்கட்சியினருக்காக செலவிடப்படுகின்றது.


அண்மையில், சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேசும் போது, ’’முந்தைய தி.மு.க ஆட்சியின்போது முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 145 இடங்களில் சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டது. பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததன் நினைவாக மேலும் 95 சமத்துவபுரங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2008-09 தமிழ்நாட்டில் 29 சமத்துவபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இங்கு திறக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தோடு சேர்த்து இதுவரை 9 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் மீதமுள்ள 20 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு விடும். 2009-10-இல் மேலும் 30 சமத்துவபுரங்களும், 2011-ஆம் ஆண்டு மீதம் உள்ள 36 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு மொத்தம் 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்பட்டு திறக்கப்படும்’’ என்றார்.


கலைஞரின் முற்போக்கு கனவு திட்டம் என்றும், சமுதாயத்தை மாற்றுவதற்கான திட்டம் என்று தி.மு.க. அரசு மார்தட்டி வரும் இந்தத் திட்டமே ஒரு மோசடியான திட்டம். பட்டினியால் வாடுகிறவனுக்கு உணவு கொடுக்க வேண்டிய நிதியை வைத்து கோயிலில் அன்னதானம் வழங்கிய ஜெயலலிதாவின் திட்டம் போல, தலித் மக்களுக்கு வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய பணத்தில் இந்த 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்படுகின்றன.


தலித்துகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் தாட்கோ மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் வீடு கட்டித்தர வேண்டும். வேறு எந்தத் திட்டத்துக்கும் இந் நிதியை பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, சமத்துவபுரங்களுக்கு தமிழக அரசு நிதியை வீணாக செலவழித்து வருகிறது. பெரியாரின் பெயரால் வாழ்வின் உச்சத்தை தொட்ட கருணாநிதி சமத்துவபுரம் அமைக்க முடிவெடுத்தபோது, இதற்கான நிதியை தமிழக அரசே தமது நிதியில் இருந்து ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், தலித் மக்களுக்கான நிதி தவறான வழியில் செலவிடப்படுகிறது.

இந்த இடத்தில் சிலர் யோசிக்கலாம். வீடு, மானியக் கடன்கள் ஆகியவை அரசாங்கமா பார்த்து கொடுக்கிற இலவசங்கள் தானே... எவ்வளவு கொடுத்தால்தான் என்ன? என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. இப்படி எண்ணுபவர்கள்தான் படித்துவிட்டு அலுவலராக வரும்போது, அந்த மனநிலையோடே செயல்படுகிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக தலித் மக்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்த, வாழ்கிற இந்த ஆதிக்க சமூகம், தலித்துகளின் வாழ்நிலையை மாற்ற கடமைப்பட்டுள்ளது.

தலித்துகளுக்கு அரசாங்கம் செய்வது சலுகையோ, இலவசங்களோ அல்ல; அவை தலித்துகளின் உரிமைகள் என்பதை வரலாற்று நிகழ்வுகளை தெரிந்துகொண்டு,
திறந்த மனதோடு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதிக்கச் சாதிகளில் பிறந்தவர்கள் அதனை ஒப்புக்கொள்வதன் மூலமாகவே தலித்துகளின் உரிமைகள் முறையாக அவர்களை சென்றடையும்.

இந்த சமத்துவபுரம் என்ற மோசடி திட்டம் பற்றி செ.கு.தமிழரசன் மட்டுமே கண்டித்திருக்கிறார். தலித்துகளின் ஏகபோக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்கிற வேறு எந்த தலித் தலைவர்களும் இது குறித்து வாய் திறக்கவேயில்லை. வெறும் ஒன்று, இரண்டு சீட்டுகளுக்காக தமது மக்களின் அடிப்படை உரிமைகளைகூட விட்டுத் தர தலித் தலைவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.


புனிதமான இடங்கள் என்று சொல்லப்படுகிற கோயில்களை கட்டுவதற்கு பல ஏழைமக்கள் மாண்டுபோனார்கள். அவர்களின் பிணங்களின் மீதுதான் நாம் வியக்கும் கோயிகளும் அரண்மனைகளும் கட்டப்பட்டன. அந்த கெடுகெட்டத்தனத்தை அரசன் செய்தான் என்பதாலேயே யாரும் தட்டிக் கேட்டு புரியவைக்கவில்லை. அது போலவே, தலித் தலைவர்களும், சமநீதி சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த மாதிரியான மோசடிகளை செய்யும் ஆளும் வர்க்கத்தையும், அதிகாரிகளையும் தட்டிக் கேட்காமல் இருக்கும் வரை - தலித்துகளின் சமாதிகளின் மீது சமத்துவபுரங்களை தமிழக அரசு கட்டிக்கொண்டுதான் இருக்கும். இந்த நிலையை மாற்ற சமூக ஆர்வலர்கள் பெரும் விவாதத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
முருக சிவகுமார் (murugasivakumar)

இல்லாத ஒரு பொருளை இறைவனென்று சொல்லுவார்;

இருக்கின்ற மானிடரை இழிவு என்று சொல்லுவார்


- இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர் பாடியது. இப்போதும் இந்தப் பாடல் வரிகளை சொல்லுமளவுக்கு சமூகம் இருக்கிறது என்பது அருவெறுப்பானது மட்டுமல்ல, வேதனையானதும்கூட.

கடவுளை நம்புகிறவர்களின் பேச்சில் ஒருவித வெறித்தனம் இருக்கும். இந்த வெறித்தனம்தான் பல தகராறுகளுக்கெல்லாம் மூலக்காரணம்.


கட்ந்த வாரத்தில் செய்தித்தாளை பார்த்தபோது, ஒரு நிழற்படம் கண்களை உறுத்தியது. மனதுக்கு நெருடலை தந்த அந்தப் படம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள செட்டிப்புலம் கிராமத்தில் தலித்மக்கள் ஒரு கோயிலுக்குள் நுழைந்து வழிபட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்டது.

இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அதன் பெயரால் நடந்துவரும் அநியாயங்கள் ஏராளம். கடவுள் என்று சொல்லி கல்லை நேசிக்கும் பலர் மனிதர்களை நேசிப்பதில்லை. அதனால்தான் மனிதநேயமற்ற கொடுமைகள் நடந்து வருகின்றன. செட்டிப்புலம் கிராமத்தில் என்ன நடந்தது? யாரால் நடந்தது? இத்தகைய சம்பவங்களுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? என்பது குறித்து விவாதிக்கலாமென்று தோன்றியது.


செட்டிப்புலம் கிராமத்தில் வன்னியர்கள் 300 குடும்பங்களும், தலித்துகள் 115 குடும்பங்களும் வசிக்கின்றன. வன்னியர்களில் பெரும்பான்மையோர் தென்னந்தோப்புகளுடன்கூடிய நிலம் வைத்துள்ளனர். அவர்களின் நிலங்களில் தலித்துகள் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இங்கு கடைத்தெருவிலுள்ள சலூன் கடையில் தலித்துகளுக்கு முடிவெட்டுவதோ, முடி மழிப்பு செய்வதோ மறுக்கப்பட்டு வருகிறது. ஆதிக்க மனோபாவத்தை பார்த்து பழகிப் போன தலித்துகள் பக்கத்து ஊருக்கு சென்று முடிவெட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


இப்படிப்பட்ட செட்டிப்புலம் கிராமத்தில் ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைய ஆதிக்கச் சாதி இந்துக்களான வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்டோபர் 14-ஆம் தேதி, சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் தலித்துகள் ஆலய பிரவேசம் செய்ய முயன்றனர். அதனை அறிந்த வன்னியர்கள் திரண்டு நின்று அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, ஆதிக்கச் சாதி கருத்தியலை விட்டுத் தர தயாராக இல்லாத வன்னியர்கள், காவல்துறை ஊர்தி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் காவல்துறையினர் காயமடைந்ததால் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியதால் அன்று மாலை 3 மணிக்கு பிறகு வெறும் முன்னூறு குடும்பங்களில் வாழும் வன்னியர்களை அடக்க ஏராளமான அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டார்.


இந்நிலையில், கோயில் நுழைவு பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், அன்று 10 ஆயிரம் தலித்துகளுடன் ஆலயப் பிரவேசம் செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.


இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை (வன்னியர்) முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடந்தது. இதில், தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.


இத்தீர்மானத்தை செயல்படுத்த, அன்று இரவே கோயிலில் ஆயுதப்படை பிரிவு காவலர்கள் குவிக்கப்பட்டனர். கோட்டாசியர். இராஜேந்திரன்(ஆதிதிராவிடர்), வேதாரண்யம் வட்டாட்சியர் கருணாகரன்(ஆதிதிராவிடர்) ஆகியோர் வீடு, வீடாக சென்று தலித் மக்களை 4 வேன்களில் ஏற்றி அழைத்து கொண்டு சென்றனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் முனியநாதன்(ஆதிதிராவிடர்), மாவட்ட வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை(வன்னியர்) ஆகியோர் கோயிலில் காத்திருந்தனர். பின்னர், வேன்களில் கொண்டு வரப்பட்ட தலித் ஆண்களும், பெண்களுமாக 70 பேர், மாவட்ட ஆட்சியர் முனியநாதன் தலைமையில் 11.45 மணிக்கு கோயிலுக்குள் சென்றனர்.


சிறப்பு பூஜைக்கு பிறகு தலித் மக்களுக்கு சுண்டல், சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. (இப்படிப்பட்ட சடங்கு நாடகத்தை நடத்திய ஆட்சியாளர்கள் அல்வா கொடுத்திருக்கலாம்)


செட்டிப்புலம் கோயிலுக்குள் தலித் மக்களை அழைத்து சென்ற நிகழ்வின் நிழற்படத்தை பத்திரிகைகளில் பார்த்தபோது, (மேலே இருக்கும் படத்தை நீங்களும் பாருங்கள்) பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா என்று மனம் குமுறியது. மதத்தையும், சாதியையும் நிலைநிறுத்தி பிரச்சனைகளை உருவாக்கும் கடவுள் என்னும் கற்பிதம் தேவையா? என்று காலங்காலமாக முற்போக்குவாதிகள் கூறிவருகின்றனர். ஆயினும் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையோர் இன்னும் திருந்தியபாடில்லை. அதேசமயத்தில், இந்த கோயில் நுழைவு போராட்டம் தேவையா? என்று சிலருக்கு கேள்வியெழலாம். சாதியின் அடிப்படையில் விளைந்த அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அனைத்து இடங்களிலும் புழங்க உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவது மிக அவசியம். ஆகவே, இதைப் பற்றி விவாதிப்பது நம் கடமை என்று தோன்றியது.


இல்லாத ஒரு பொருளை இறைவனென்று வழிபடும் பகுத்தறிவற்றவர்கள். தன்னைப் போலவே உடலும் சதையுமாக இருக்கிற சக மனிதனை சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தி வருகிறார்கள். கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடும். இது கடவுளின் கட்டளை’’ என்று சொல்லி இந்தச் சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களை பொது விசேசங்களில் கலந்துகொள்ள விடாமல் ஒதுக்கிவைக்கிற வக்கிர புத்தியுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லோரும் கடவுளை வழிபடுகிற காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்கள்.


இத்தகைய கேடுகெட்டத்தனத்தோடு இந்த உலகம் இருக்கிறதென்றால், அதைப் பார்த்துக் கொண்டுகடவுள்’’ சும்மா கிடப்பது ஏன்? எல்லோருக்கும் நல்லது செய்து, கெட்டது செய்பவர்களை அழிப்பதுதான் கடவுளின் வேலையென்றால், ஆதிதிராவிடர் மக்களை கோயிலினுள் நுழையக்கூடாதென தடுக்கும் கெடுகெட்ட சாதிவெறியர்களை, அந்தக் கடவுள் அழிக்காதது ஏன்?


சக்தி - உலகை ஆள்பவன் - எல்லாம் தெரிந்தவன் என்று பொய்யுரைகளால் புகழப்படும் கடவுள்’’ இருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருக்குமானால், ஆதிதிராவிடர் மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் செட்டிப்புலம் ஆதிக்க சாதி இந்து வன்னியர்களின் முன் அந்தக் கடவுள் வந்து தட்டி கேட்டிருக்கலாமே? அது இருந்தால்தானே நியாயத்தை கேட்கும்!


காலம்காலமாக கடவுளின் பெய்ரால் ஒதுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட தலித்து மக்களை, அரிஜன்ஸ் - கடவுளின் பிள்ளைகள் என்று ஆதிக்கச் சாதி மனநோயாளி காந்தி குறிப்பிட்டார். அதன் வேறுபட்ட பாணியில், எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்லும் முட்டாள்கள் இந்த உலகத்தில் இப்போதும் நிறைந்திருக்கிறார்கள். தலித்துகளும் கடவுளின் பிள்ளைகள் என்றால், தமது பிள்ளைகளில் ஒரு பிரிவினரான வன்னியர்கள் இன்னொரு பிரிவினரான ஆதிதிராவிடர்களை வீட்டினுள் - கோயிலினுள் நுழைய விடாமல் தடுக்கும்போது, தந்தை கடவுள் இருந்தால் அது நேரில் வந்து, ஏண்டா எப்படி செய்யறீங்கன்னு கேட்டு திட்டி அடிக்க வேண்டாமா? அப்படி செய்யவில்லையெனில், அந்த ஆதிதிராவிட மக்கள் - கடவுளின் வப்பாட்டிக்கு பிறந்த பிள்ளைகளா? அவர்களுக்கு வீட்டினுள் நுழைய பங்கு உரிமை இல்லையா? இப்படி சாதி அடிப்படையில் உயர்வு - தாழ்வு - தீண்டாமை கற்பிக்கப்பட்ட இந்தச் சமூகத்தை மாற்ற முடியாத - கண்டுகொள்ளாத கடவுள் எங்கு இருக்கிறான்; எப்படி இருக்கிறான் என்பதை பக்தகோடிகள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?. இதையெல்லாம் செய்ய துப்பில்லாத கடவுள் இருப்பதாக நம்பி பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களே, உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா? உங்கள் உடல் கூசவில்லையா?


உலகத்தில் ஓரறிவு உயிர், ஈரறிவு உயிர், ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர் என உயிர்கள் பல வகைகளில் பிறந்து வாழ்கின்றன. அவற்றில், ஆறாவது அறிவு இருப்பதாலேயே பகுத்தறிந்து உண்மைநிலையை உணரும் பக்குவம் மனிதனுக்கு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அதை கடவுளென்று பிதற்றிக்கொண்டு, சமூகத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் கேடு கெட்ட முட்டாள்களின் கூட்டம், பகுத்தறிந்து பார்க்க மறுப்பது ஏன்? காரணம், பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்தால், பலரும் ஏமாற்றி பிழைக்க முடியாது.


மனிதன் சிந்திக்காத வகையில் அறிவை மழுங்கடிக்கும் முயற்சி பல மட்டங்களிலும் தொடர்கின்றன. தினமலர், குமுதம், தினகரன், சக்தி விகடன், கல்கி உள்ளிட்ட பல பத்திரிகைகள் பக்தி ஸ்பெசல் வெளியிடுகின்றன. அதேபோல், விஜய் தொலைக்காட்சி நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் சாமி விசயங்களை ஒளிபரப்பினால், புதியதாக வந்துள்ள ஜி தொலைக்காட்சி தனது பங்குக்கு நம்பினால் நம்புங்கள் (நம்பலனா சாமி கண்ண குத்திடுமா?) என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.


சன் தொலைக்காட்சிக் குழுமத்தையும் ஜெயா தொலைக்காட்சி குழுமத்தையும் சொல்லாவே தேவையில்லை. சோதிடம், கோயில் தரிசனம், அருளாசி, இராமாயணம், மகாபாரதம்... என பல நிகழ்ச்சிகளில் பிற்போக்குத்தனக்களை மக்களின் மூளைக்குள் திணிக்கின்றன. பெரியாரின் பாசறையில் இருந்து வந்த கருணாநிதி இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரிரு ஊடகங்களை தவிர மற்றவை அனைத்தும் பிற்போக்குத்தனத்தையே கற்பிக்கின்றன. இதையெல்லாம் மாற்றவேண்டிய பொறுப்புள்ள பெரியாரின் பிள்ளைகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக்கொண்டு சொத்துக்களை காப்பதற்காகவே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.


மக்களை நல்ல வழியில் செலுத்த வேண்டிய கடமையுள்ள தலைவர்கள், தனது தொண்டர்களுக்கு சாதிவெறியை தூண்டிவிடுவதை தொழிலாகவே கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கடந்து சிந்திக்கும் திறனுள்ள உயிரினமான மனிதர்கள், எண்ணங்களை அகல விரித்து அறிவுடன் சிந்தித்தால் உண்மை விளங்கும். பிரச்சனைகள் தீரும்.


பெரியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்தக் காலக்கட்டத்திலும் தமிழ் நாடெங்கும் செட்டிப்புலம் போன்ற கிராமங்கள் ஏராளமாக கிடக்கின்றன. ஆதிக்கச் சாதி இனங்களில் பிறந்த பெரியாரிஸ்ட்களும், கம்யூனிஸ்ட்களும் சாதி ஒழிப்பை தமது உறவுகளிடம் பேசாமல், தலித்துகளிடம் பேசி வருவதால்தான் இந்த நிலை தொடர்கிறது. இந்தப் போலியான மனப்பான்மையை பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்ட்களும் விட்டுவிட்டு, தம் சாதியை சேர்ந்தவர்களில் 10 பேரையாவது மாதந்தோறும் சாதியற்ற மனிதர்களாக உருவாக்க முயல வேண்டும். அதனை உறுதிமொழியாக ஏற்று செயல்பட முன்வரவில்லையெனில், முற்போக்கு அரிதாரம் பூசிக்கொண்டு, பிழைப்பு நடத்தும் தொழிலாகவே பெரியாரியத்தையும் பொதுவுடமை சித்தாந்ததையும் இவர்கள் காண்கிறார்கள் என்பதையே உங்கள் செயல்பாடுகளில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.


தமிழ்த் தேசிய அரசியல் பேசிவரும் தலைவர்கள் சாதிவெறியை தூண்டும்படியும் பேசி வருகிறார்கள். சாதிகளோடு பிரிந்து கிடக்கும் பல இனங்களை ஒரே தமிழ்த் தேசத்தில் எப்படி அடைக்க முடியும்? இத்தகைய தலைவர்கள் அனைவரும், சாதி ஒழிப்பே, சமூக விடுதலை என்ற சித்தாந்தத்தை ஆழமாக புரிந்துகொண்டு, தமது உறவுகளின் சாதிப்பற்று மனோபாவத்தை மாற்ற முன்வர வேண்டும். அதுதான் சமூகத்துக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.


தலித்துகளின் அடிப்படை உரிமை பிரச்சனைகளை அறிந்து களைய வேண்டிய பொறுப்புள்ள தலித் இயக்கங்கள் அம்பேத்கர் விருது’’ பெற்றுக்கொண்டும், தொகுதி பங்கீட்டில் ஓரிரு இடங்களை பெற்றுக்கொண்டும் மௌனித்து கிடப்பது வெட்கக்கேடானது.


முற்போக்கு - தமிழ்த்தேசிய - பொதுவுடமை அரசியல்வாதிகளுக்கும், கடவுள் இருப்பதாக சொல்லும் பக்தர்களுக்கும் கொஞ்சம்கூட வெட்கமில்லை.


தமிழக அரசியலில் இருந்து திராவிட அரசியல் மாயையை அகற்றுவதன் மூலமாகவே இப்போதுள்ள இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கான திட்டங்களை வகுக்க முடியும் என்ற கருத்தியலை மேலும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு வறட்டுத்தனமான தமிழ்த் தேசிய அரசியலையும், கம்யூனிச அரசியலையும் விவாதிக்க வேண்டும்.

முருக சிவகுமார் (murugasivakumar)

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 17- அன்று அக்கட்சியினரால் தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாளென கொண்டாடப்பட்டது. இது பலரையும் சாதாரணமாக கடந்து போன செய்தியாக இருக்கலாம். ஆனால், அன்று தினமலர்(ம்) நாளேட்டில் வெளியான ஒரு செய்தி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச் செய்திக்குப் பின்னால் ஒளிந்துள்ள அரசியல் வக்கிரம் பற்றி பலரும் சிந்திக்கவேயில்லை.

பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் வைசியன், வயிற்றுல பிறந்தவன் சத்திரியன், கால் பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் - என்கிற மனு கோட்பாட்டின்படி, தலித்துகள் கடவுளுக்கு பிறக்கவில்லை (ஆண் - பெண் இணைந்த மனிதர்களுக்கே பிறந்தார்கள்) என்று கூறி அவர்களை ஊரின் ஒதுக்குப்புறமாக வைத்திருந்த கொடுமை நடந்ததெல்லாம் அந்தக் காலம்; இப்போ அதெல்லாம் கிடையாது, நாங்க தாயா புள்ளையா பழகுறோம்... என்று பலர் மூடத்தனமாக பேசுவதுண்டு. இந்நிலையில், பார்ப்பனக் கொள்கை பரப்பு ஊடகமான தினமலர் சாதி, மத அடையாள சொல் வழக்கினூடாக சமூகத்தில் நிலைநிறுத்த முனையும் வக்கிர அரசியல் பற்றி பேச இவர்கள் தயாராகயில்லை. காரணம், அந்தச் சொற்கள் பிற்போக்கு தினமலருக்கு மட்டுமல்ல... முற்போக்கு - தமிழ்த்தேசிய அரசியல் பேசும் சாதி இந்துக்களுக்கும் பழகிப்போனவைதான். சமூக நீதி கொள்கை பேசி அரசியல் நடத்தும் தலைவர்கள் வாழும் ஊரில்கூட நீதியற்ற அநியாய சாதி மோதல்கள் இப்போதும் நடந்து வருகின்றன. இதைத்தான் தினமலரும் எதிர்பார்க்கிறது.

இதனால், காலம் கடந்தாலும் அந்தச் செய்தி குறித்து இப்போது விவாதிக்கலாம் என்றே தோன்றுகிறது.

” விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் ஊர் தரப்பினருக்கும், காலனி தரப்பினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டது......... நேற்றுக் காலை காலனி பகுதியில் உள்ள டி.பி.ஐ. பிரமுகர் கண்ணதாசன் ஊர் பொது இடத்தில் திருமாவளவன் பேனர் வைத்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றுக் காலை ஊர் தரப்பை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து டி.பி.ஐ. பிரமுகரான கிளியனூர் ஊராட்சித் தலைவர் இரணியன் மற்றும் சிலர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு காலனி பகுதிக்கு வந்து விசாரித்து விட்டு திரும்பி சென்றபோது, ஊர் தரப்பை சேர்ந்த கிருஷ்ணராஜ், சுகுமார் ஆகிய இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தாக்குதலுக்குள்ளான இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். இதையறிந்த ஊர் தரப்பினர் பிற்பகல் 2 மணிக்கு காலனி பகுதிக்கு சென்று, அங்குள்ள குடிசை வீடுகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது....”

-இப்படி நீளும் இந்தச் செய்தியில் ஊர் என்ற சொல் 8 முறையும், காலனி என்ற சொல் 4 முறையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நண்பர்களே! இப்போது நான் எதைப்பற்றி பேச வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். குறிப்பிட்ட சொற்கள் எத்தனை தடவை பயன்படுத்தபட்டு இருக்கிறது என்பதை கணக்கிடுவது நம் நோக்கமல்ல. அந்தச் சொற்கள் ஏன் ஆளப்பட்டு இருக்கிறது; அதன் உள் அரசியல் என்ன என்பதை ஆராய்வதே நம் நோக்கம். அந்தச் செய்தியில், ”தலித் அரசியலின் அடையாளமாக விளங்கும் திருமாவளவனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத சாதி இந்து வன்னியர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் சண்டை ஏற்பட்டது’’ என்று இருந்திருக்க வேண்டும். அதுதான் உண்மை. ஆனால் தினமலரோ, ஊர் பொது இடத்தில் விலக்கப்பட்ட தலித்துகள் பேனர் வைத்ததே தவறு என்ற ரீதியில் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வக்கிர அரசியலின் நீட்சியாகவே ஊர் - காலனி சொற்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நாள்தோறும் தினமலரை புரட்டி பார்த்தால், (1) இந்து மதத்தை நிலைநிறுத்தும் கோவில் பற்றிய செய்திகள், (2) தலித் மற்றும் சூத்திரத் தலைவர்களை கிண்டல் செய்யும் செய்தி, (3) சாதி மோதல்களில் சாதி இந்துக்களுக்கு ஆதரவான செய்தி, (4) ஆரிய அரசியலுக்கு எதிரான திராவிட அரசியலை ஏளனம் செய்யும் செய்தி. (5)அரசும் ஆட்சியாளர்களும் அடித்தள மக்களுக்கு எதிராக செயல்படும்போது மக்கள் மத்தியில் சிலர் ஆக்ரோசமாக பேசும் செய்தி. இவ்வாறான செய்திகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

ஈழத்தில் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு இரசாயண குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்தபோதும், ”விடுதலைப் புலிகள் அட்டூழியம்; மக்கள் சிறைப்பிடிப்பு’’ என்று செய்தி வெளியிட்ட 'பெருமை' தினமலரையே சேரும். ஈழமக்களுக்கு ஆதரவாகவும் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடிவந்த விடுதலைப்புலிகளை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்களில் பேசினால் அதை தவறாமல் வெளியிட்டு காவல்துறைக்கு காட்டிகொடுக்கும் பணியையும் தினமலர் செய்து வந்தது. விடுதலைச் சிறுத்தைகள் என்றாலே தினமலருக்கு எட்டிக்காய். யாரோ செய்யும் தவற்றைகூட விடுதலைச் சிறுத்தைகள் செய்ததாக செய்தி வெளியிடும். அதனைக் கண்டு அக்கட்சியினர் போராடினால், வன்முறை செய்ததாக செய்தி வெளியிட்டு காவல்துறைக்கு காட்டி கொடுக்கும். திருமாவளவனின் தலைமையில் கிளர்ந்தெழும் தலித் அரசியல் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாததே இதற்கு காரணம் எனலாம்.

ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகள் சீர்கேடாக இயங்குவது குறித்து செய்தி வெளியிடுமாறு எனக்கு தெரிந்த ஒருவர் தினமலரை கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அச்செய்தியை தினமலர் வெளியிட்டது. அதில், மாணவர்கள் அல்லல்படுவது குறித்து ஒரு வரிகூட எழுதாமல், அங்கு தங்கியுள்ள தலித் மாணவர்கள் பராமரிக்காமல் அலங்கோலமாக வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலையோரமாக இருந்த விநாயகர் கோவில் சுவர் சிறியளவு உடைக்கப்பட்டால் அதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாக கரிசனையும் செய்தி வெளியிடும்.

கோவில் தேர் திருவிழாக்களை வெளியிடும் தினமலர், அக்கோவில்களில் இக்காலத்திலும் நுழையகூட முடியாமல் இருக்கும் மக்கள் பற்றி இதுவரை செய்தி வெளியிட்டிருக்குமா? ’ஊர் கூடி தேர் இழுப்போம்’ என்று பலரும் சொல்கிறார்கள். இந்த வாக்கியத்தின் அர்த்தம்: சமூகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு ஒரு பெரிய செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஊர் கூடுவதில் ஒதுக்கப்பட்ட காலனி மக்கள் என்று சொல்லப்படுகிற தலித்துகள் சேர்க்கப்படவில்லை என்ற செய்தியை பதிவு செய்வதில்லை.

காலங்காலமாக ஒடுக்கப்பட்டு ஓரமாக கிடந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பற்றிக்கொண்டு பொதுதளத்தில் வந்துவிட்ட பின்னரும் தனியாக துண்டிக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் காலனி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அந்த மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயல். தினமலர் திட்டமிட்டு செய்துவரும் இந்த கீழ்தரபுத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தலித்துகளை ஒதுக்கும் தீண்டாமை சுவரை மாவட்ட நிருவாகம் அகற்ற முனைந்தது. சேலம் மாவட்டத்தில் திரௌபதியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்தபோது மாவட்ட நிருவாகம் சமரச முயற்சியை மேற்கொண்டது. அப்போதெல்லாம் சாதி இந்துக்கள் ஊரில் இருந்து வெளியேறி ஆடு, மாடு, பொண்டு புள்ளக்குட்டிகள் உள்ளிட்ட விலங்குகளுடன் காடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஊரில் உள்ள ஆறறிவு மனிதர்களான தலித்துகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத சாதி இந்துக்கள் காடுகளில் ஐந்தறிவு விலங்குகளுடன் சேர்ந்து வாழ முன்வந்தது அவர்களின் அறிவை அம்பலப்படுத்தியது. அப்போது அந்தச் செய்தியை தினமலர்(ம்) வெளியிட்ட போது, ஊர் தரப்பினர் ஊரைவிட்டு வெளியேறினர் என்று பெரும் கரிசனை பொங்க வருத்தப்பட்டது. ஆனால், காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக சேரி - காலனி என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தலித்துகளை வாழ நிர்பந்தப்படுத்திய காட்டுமிராண்டி கயமைத்தனத்தை பற்றி மனு”தர்மம்’’ பேசும் தினமலர்(ம்) என்றாவது வெட்கப்பட்டு எழுதியதுண்டா? இல்லவே இல்லை. தலித்துகளின் வாழ்வு பின்தங்கியதற்கு யார் காரணம் என்பதையும் அவர்கள் எழுச்சிகொள்வதற்கு தடையாக இருந்தது எது என்பதையும் அவர்கள் எழுதியிருந்தால் தலித் அரசியல் என்கிற சொற்கள் இந்தச் சமூகத்தில் இருந்திருக்காது. இதைவிட முக்கியமாக ஒன்று நடந்திருக்கும்: சாதி ஒழிப்புக்கு ஆய்தமாக மாமேதை அம்பேத்கர் வலியுறுத்தியதும், பார்ப்பன சாதி இந்துக்களால் கைவிடமுடியாததுமான அகமண முறை ஒழிந்து, அவர்களின் பெண் பிள்ளைகள் தலித் இளைஞர்களுடன் கைகோர்த்திருப்பார்கள். அந்தநிலை வந்துவிடக்கூடாது என்பதே தினமலரின் எதிர்பார்ப்பு,

பழமைகள் மாறி போய் நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக அனுப்பிய நிலையில்கூட, தினமலர்(ம்) போன்ற பார்ப்பனக் கொள்கை பரப்பு ஊடகங்கள் பழைய சாதி அடையாளத்தையும், மத அடையாளத்தையும் முன்நிறுத்தியே செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உதாரணமாக, இந்து சாதி சங்கங்களின் செய்தியை முக்கியத்துவம் கருதி வெளியிடும்போது. அதில், கெங்கசாமி ’நாயுடு’, வீரபத்திரக்(ன்) ’கவுண்டர்’ தலைமை வகித்தனர் என்று இருக்கும். சாதியை நிலைநிறுத்தும் இத்தகைய அடையாள சொற்களை பயன்படுத்தும் நோக்கம் என்ன? அடுத்தவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அவர்களின் நல்வாழ்வுக்கு உகந்தது எதுவோ அதை மக்களின் மனத்தில் நிலைநிறுத்த வேண்டும் அதுதான் அவர்களுக்கு அவசியம்.

நாட்டில் நடந்துவரும் கேடுகளுக்கு முழுமுதல் காரணமான மதத்தையும் சாதியையும் தோற்றுவித்த கடவுள் சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி சாதியற்ற சமூகத்தை நிர்மாணிக்க தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் மாமேதை தந்தை பெரியார். ஆனால், பாலியல் குற்றம் மற்றும் கொலை குற்றத்தில் சிறைக்கு சென்ற ஊத்தவாயம் சங்கரனை “பெரியவாள்’’ என்று மரியாதையுடன் செய்திகளில் குறிப்பிடும் தினமலர், தமது இனத்தவரை அவமானப்படுத்தியவரை அவமானப்படுத்தும் கேடுகெட்ட எண்ணத்தில் தந்தை பெரியாரை - ஈ.வெ.ராமசாமி என்றே குறிப்பிட்டு வருகிறது.

இவ்வாறு சாதி, மத அடையாளங்களை நிலைநிறுத்தும் பிற்போக்குத்தன உள் அரசியல் கொண்ட பாசிச ஊடகம் தினமலர் என்றுள்ள நிலையிலும் பல ஆயிரம் பிரதிகள் விற்பனையுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இதற்கு சாதியின் பிரம்மாக்களான பார்ப்பனர்களின் ஆதரவு மட்டுமே காரணமல்ல. 'இப்பெல்லாம் சாதிகளே இல்லை; நாங்க எல்லோருடனும் தாயா புள்ளையா பழகுறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சாதி இந்துக்களும் அவர்களின் உறவுகளும்தான். அதனால்தான் சமூக அக்கறை கொண்ட பல நல்ல ஏடுகள் பொருளாதார ரீதியில் திணறும்போதும், தினமலர் நாளேடு எந்தவித சிரமங்களுமின்றி வெளிவந்துகொண்டிருக்கிறது.

இவற்றைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை காரணம், தந்தை பெரியார் பிறந்த பூமியில் பெரியாரிஸ்ட்கள் ஆளுகிறார்கள் என்கிற பெருமையே போதும். இவர்களின் உறவுகளால் செருப்பு மாலை போட்டு அவமானப்படுத்தப்படும் அம்பேத்கர் சிலைகளுக்கு பிறந்த நாளின்போதும், இறந்த நாளின்போதும் பூமாலை போடும் பரந்த மனப்பான்மை கொண்ட் தமிழ்த்தேசிய சமூக நீதி அரசியல் பேசுபவர்கள் நமக்கு தலைவர்கள் என்ற பெருமையும் போதும். எந்தவித மன நெருடலோ அச்சமோ இன்றி தினமலர்(ம்) தம் ’சமூகக் கடமை’யை தொடர்ந்து ஆற்றும்.

இறுதியாக, தினமலரின் வக்கிர அடையாள அரசியலை கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளும் ஊர் - காலனி என்ற பிரிவினையோடுதான் இப்போதும் இருக்கின்றன என்பதை தினமலர் செய்தியாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது. ’சாதிகள் இப்போது இல்லை; ரொம்ப மாறிடுச்சி..’ என்று சொல்பவர்களின் முகத்தில் அறைந்து உறுதிப்படுத்திய தினமலருக்கு நன்றி சொல்வோம்.

இது குறித்து தொடர்ந்து விவாதிப்போம்; கருத்துகளை பரிந்துகொள்ளுங்கள்.