முருக சிவகுமார் (murugasivakumar)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் ஓர் உடலை காட்டி செய்தி வெளியிட்டது. அந்த உடலை காட்டுவதற்கு முன்னர் மூன்று நாட்களில் பிரபாகரன் சாவு குறித்து பல்வேறு முரண்பட்ட செய்திகளை இலங்கை இராணுவம் கூறியது. அதாவது, பிரபாகரன் புலிகளுடன் தற்கொலை செய்துகொண்டார். பிரபாகரன் முக்கிய தளபதிகளுடன் ஓர் மூடுந்தில் தப்பி செல்ல முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டார்; உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அவற்றில் பிரபாகரன் உடல் எது என்பதை கண்டறிய முயன்று வருகிறோம் என்று கூறியது.
இந்த முரண்பட்ட தகவல்களால் இது பிரபாகரன் உடல் என்று சிங்கள இராணுவம் காட்டிய உடலை பெரும்பாலானோர் நம்பவில்லை. இந்நிலையில் பிரபாகரன் இறக்கவில்லை; உயிருடன் உள்ளார் என்று விடுதலைப் புலிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரெதிராக "பிரபாகரன் இறந்தது உண்மை" என்று கூறப்பட்டது. இதனால் பிரபாகரன் சாவில் மர்மம் தொடர்கிறது.

இந்நிலையில், இலங்கை காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ள கருத்து, பிரபாகரன் விசயத்தில் ஒரு மாறுபட்ட முரண்பட்ட கருத்தாக உள்ளது.

கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆய்தக்குழு இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், இளைஞர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதனை அறிந்து அங்கு காவல்துறை சென்று விசாரணை நடத்தியது. அப்போது, ஒரு பெரிய தகவல் வெளியாகியுள்ளது.
"துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், "துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞர் பெயர் விமலன். அவர் யாரெனில், கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரின் மகன். விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடையவர் சற்குணராஜா என்று பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.
சற்குணராஜா பற்றி இலங்கைப் படையினர் நடத்திய விசாரணையில், அவர் தற்போது இலங்கையில் இல்லை; தப்பி வேறொரு நாட்டுக்கு சென்றுவிட்டார் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

"கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான நிழற் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட நிழற் படமொன்று இருந்துள்ளது.
இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற உருவமுடைய ஒருவர் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது . நிழற் படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் வேறொரு நாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது'' என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆக, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சற்குணராஜா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவத்தை ஒத்த உருவத்தை உடையவர் என்று இலங்கை காவல்துறை ஒப்புகொண்டுள்ளது. பிரபாகரன் உருவமுடைய இரண்டு பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் தப்பிவிட்டார். தப்பியவர் பிரபாகரனாக கூட இருக்கலாமே?

இது குறித்து கொட்டாஞ்சேனை காவல் துறையினர் உட்பட சிறப்பு காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றது.
|
0 Responses