முருக சிவகுமார் (murugasivakumar)
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போர் நடந்து வருகிறது. இப்போர் காரணமாக கிழக்கு மாநிலத்தில் வாழ்ந்து வந்த ஆண்கள் பலரும் இறந்துவிட்ட நிலையில் 49,000 பெண்கள் கைம்பெண்களாகி விட்டனர்! இது தொடர்பாக இலங்கை அரசுக்கு ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்
, “கைம்பெண்கள் அனைவரும் வேலை வாய்ப்பு கிடைக்காததால் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வேலை அளிக்காவிட்டால் அவர்களில் பலர் மனிதவெடிகுண்டுகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த
49,000 கைம்பெண்களில் 35,000 பேர் 30 வயதுக்கு கீழானவர்கள். இது தவிர போராளிகள் இயக்கத்தைச் சேர்ந்த 8,000 கைம்பெண்களும் வேலையில்லாமல் இருக்கின்றனர். இது மிகவும் கடுமையான விசயமாகும். இதற்கு உடனடியாகத் தீர்வு கண்டாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில்
நடைபெறும் போர் காரணமாகப் பலர் கைம்பெண்களாகியுள்ளனர் என்பது ஒருபுறம் என்றால், இதுதவிர 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல்கோளின் (சுனாமி) போது பலர் தங்கள் கணவரை இழந்தனர். இவர்கள் அனைவருக்கும் உடனடியாக மறுவாழ்வு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்கள் போர்ப்படையில் சேர்ந்து மனிதவெடிகுண்டாக மாறுவதை தவிர இவர்களுக்கு வேறு வழியே இல்லை என்றும் ஐ.நா. உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் கைம்பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது தொடர்பாக கடந்த ஆண்டிலும் ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், ஒரு ஆண்டுகாலமாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக கிழக்கு மாநில முதல்வராக இருக்கும் பிள்ளையன் கூறுகையில், 'திரிகோண மலையில் நிலவெளி, மட்டக்களப்பு, பொட்டுவில் ஆகிய இடங்களில் கிழக்கு சுற்றுலா வளர்ச்சி ஆணையம் பல திட்டங்களை தொடங்கியுள்ளது. அத்திட்டங்கள் கைம்பெண்களின் வேலைவாய்ப்புக்குப் பயன்படும்'' என்றார்.

ஒட்டுமொத்தமாக தமிழினத்தை அழிக்கும் எண்ணத்துடன் இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள்செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கைக்கூலிகளாக பிள்ளையான் போன்ற தமிழர்கள் சிலர் இருக்கிறார்கள் . இந்த நிலையில் ஐ.நா. அதிகாரியின் எச்சரிக்கை எடுபடும் என்று தெரியவில்லை.
ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று பொய்யான ஒரு காரணத்தை கூறி இலங்கை அரசு அப்பாவித் தமிழ்மக்கள் மீது கொத்து குண்டுகளை வீசி கொன்று வருகிறது. நாள்தொறும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஆதரவற்று நிற்கும் ஏராளமானோர் அடுத்த நாள் இருப்போமா என்று தெரியாமல் அச்சத்துடன் நொடி பொழுதுகளை வருகின்றனர் என்பதும் அங்கு குண்டுகளால் வெடித்து சிதறிய உடல்கள் அடக்கம் செய்வாரின்றி தானே அழுகுகின்றன என்பதும் ஐ.நா.அவைக்கு தெரியாதா என்ன?

இவ்வளவு தெரிந்திருந்தும் போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கும் - இராசபக்செவுக்கும் துணிச்சலுடன் கட்டளையிடாமல் ஐ.நா.அவை அதிகாரிகள் ஒப்புக்கு அறிக்கைகளை விட்டு வருகிறார்கள்.
ஐ.நா.வின் அறிக்கைகளோ தமிழகத் தலைவர்களின் அறிக்கைகளோ தமிழ் இனத்தை ஒருபோதும் காப்பாற்றாது என்பதை உணராமல் இருப்பதுதான் தமிழ்ர்களின் பலவீனம்.

இதனை நன்றாகவே அறிந்திருந்ததால்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி, "போரை நிறுத்த இலங்கைக்கு கட்டளையிட முடியாது'' என்று கர்ஜித்தார். அதே முகர்சி, தூத்துக்குடிக்கு வந்து பேசியபோது, '' விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் இலங்கையில் போரை நிறுத்துமாறு பேசுவார்கள். தமிழ்மக்களை கொல்வதற்கு காங்கிரசு அரசு ஆய்தம் தாங்கிய வானூர்தியை தில்லியில் இருந்து அனுப்ப, அதே தமிழ்மக்களுக்காக தமிழகத்தில் இருக்கும் காங்கிரசுகாரர்கள் சேகரித்த உணவு, மருந்து பொருட்கள் வேறொரு வானூர்தியில் அனுப்பப்படும். இத்தகைய நல்ல செயலை செய்யும் காங்கிரசாரை "எந்த சொல்லால்" அழைப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது?

சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள், சட்டம், வாழ்வுரிமை, ஐ.நா.அவை. செயல்பாடு ஆகிய சொற்களுக்கு பொருள்தான் என்ன? அகராதிகளில் தவறாக இருந்தால் திருத்துங்கள் - ''இலங்கையில் 49,000 கைம்பெண்கள் தவிப்பு"-இந்த சொற்களை பார்த்தாவது!
0 Responses